தா.பேட்டை, பிப்.8: முசிறி அருகே வடுகப்பட்டியில் டாஸ்மாக் கடை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால் டாஸ்மாக் கடை திறக்கப்படாமல் அலுவலர்கள்
திரும்பிச் சென்றனர்.
திருச்சி மாவட்டம் முசிறியில் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரிக்கு செல்லும் சாலையில் வடுகப்பட்டி அமைந்துள்ளது. இந்த சாலையில் புதிதாக டாஸ்மாக் மதுபானகடை திறக்க ஏற்பாடு நடைபெற்றது. அந்த இடத்தில் டாஸ்மாக் கடை திறந்தால் பொதுமக்களுக்கும், கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகளுக்கும் இடையூறாக இருக்கும் எனக்கூறி டாஸ்மாக் கடை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கோட்டாட்சியரிடம் பொதுமக்கள் கோரிக்கை மனு அளித்தனர். இந்நிலையில் டாஸ்மாக் கடையில் மதுபாட்டில்கள் கொண்டு வரப்பட்டு கடை திறப்பதற்கான ஆயத்த பணிகள் நடைபெற்றது. இதனை அறிந்த அப்பகுதி மக்கள் டாஸ்மாக் கடை திறக்க கூடாது என வலியுறுத்தி திரண்டு வந்து திடீர் சாலை
மறியலில் ஈடுபட்டனர்.
இதனால் முசிறியிலிருந்து - புலிவலம் செல்லும் சாலையில் போக்குவரத்து பாதித்தது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த முசிறி போலீசார் பொதுமக்களை சமாதானப்படுத்தினர். சட்ட ஒழுங்கு பிரச்சனை இருப்பதால் கடையை தற்காலிகமாக திறக்க வேண்டாம் என டாஸ்மாக் ஊழியர்களிடம் அறிவுறுத்தினர். இதையடுத்து டாஸ்மாக் கடையை திறக்காமல் அலுவலர்கள் திரும்பிச் சென்றனர். பின்னர் பொதுமக்களும் கலைந்து சென்றனர். பொதுமக்கள் சாலைமறியலால் வடுகப்பட்டியில்
பரபரப்பு ஏற்பட்டது.