திருச்சி, பிப். 8: திருச்சியில் டிக்கெட் மற்றும் பணப்பையை தலைக்கு வைத்து தூங்கிய அரசு பஸ் கண்டக்டரிடம் ரூ.13,500 மற்றும் ரூ.91,500 மதிப்புள்ள டிக்கெட்டுகளை மர்மநபர் திருடிச் சென்றார். இதுகுறித்து
போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அரியலூர் மாவட்டம் கொரத்தாகுடியை சேர்ந்தவர் துரைக்கண்ணு (40). அரசு பஸ் கண்டக்டர். இவர் திருச்சி-அரியலூர் இடையே அரசு பஸ்சில் பணியில் உள்ளார். நேற்றுமுன்தினம் இரவு அரியலூரியில் இருந்து நள்ளிரவு 12.15 மணிக்கு திருச்சி சத்திரம் வந்தனர். பயணிகளை இறக்கிவிட்டபின், மீண்டும் அடுத்த டிரிப் 2 மணி என்பதால் பஸ்சை பஸ்நிலையத்தில் நிறுத்திவிட்டு டிரைவர் விஜயகுமார் மற்றும் துரைக்கண்ணு இருவரும் பஸ்சில் உள்ள சீட்டில் படுத்து தூங்கினர். இதில் துரைகண்ணு பணப்பையை தலைக்கு வைத்து படுத்திருந்தார். அயர்ந்து தூங்கிய நிலையில் இரவு 1.30மணிக்கு திடீரென கண் விழித்து பார்த்த போது, தலைக்கு வைத்திருந்த பேக்கை காணாதது குறித்து திடுக்கிட்டார். பேக்கில் வசூல் பணம் ரூ.13,500 மற்றும் ரூ.91,500 மதிப்புள்ள டிக்கெட்டுகள் மாயமாகி இருந்தது. தொடர்ந்து பஸ்சுக்குள் படுத்திருந்த டிரைவர் விஜயகுமாரை எழுப்பி நடந்த சம்பவத்தை கூறினார். இருவரும் பஸ் மற்றும் அப்பகுதிகளில் தேடியும் காணவில்லை. இதுகுறித்து கோட்டை குற்றப்பிரிவில் துரைகண்ணு புகார் அளித்தார். வழக்குபதிந்த
எஸ்ஐ மோகன்ராஜ் விசாரித்து வருகிறார்.