ஆட்டையாம்பட்டி, பிப்.8: ஆட்டையாம்பட்டியில், உறவினர் வீட்டின் பூட்டை உடைத்து நகை திருடிய வாலிபர் கைது செய்யப்பட்டார். சேலம் மாவட்டம் ஆட்டையாம்பட்டி பகுதியில், கடந்த 28ம் தேதி இரவில், 3 வீட்டில் கொள்ளையர்கள் பூட்டை உடைத்து திருட முயன்றனர். அப்போது பங்காளிகள் கோயில் உண்டியலில் இருந்த பணம் மற்றும் சாமி கழுத்தில் கிடந்த 3 பவுன் தாலி ஆகியவற்றை திருடிச்சென்றனர். இது குறித்த புகாரின் பேரில், ஆட்டையாம்பட்டி இன்ஸ்பெக்டர் நடராஜன் தலைமையில் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், நேற்று வேலநத்தம் சின்னமாரியம்மன் கோயில் தெருவில், சந்தேகத்திற்கிடமான நிலையில் வாலிபர் ஒருவர் சுற்றி திரிந்தார். போலீசார் அவரை பிடித்து விசாரணை நடத்தினர். அதில் பங்காளி கோயில் வீடுகளில் நகை, பணத்தை திருடியதை அவர் ஒப்புக்கொண்டார். விசாரணையில், அவர் நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம், தாதங்குட்டை அன்னை சத்யா நகரை சேர்ந்த மாதேஸ்வரன் மகன் தினேஷ்(25) என்பது தெரியவந்தது. இதையடுத்து, அவரை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து மூன்றே கால் பவுன் தங்கம் மற்றும் பணத்தை பறிமுதல் செய்தனர். பின்னர், அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.