×

கடம்பத்தூர் ஒன்றியம் செஞ்சி ஏரிக்கரை மீது தார்ச்சாலை அமைக்க கிராம மக்கள் வலியுறுத்தல்

திருவள்ளூர், பிப். 6: திருவள்ளூர் அடுத்த கடம்பத்தூர் ஒன்றியம்,  செஞ்சி ஊராட்சிக்குட்பட்டது பானம்பாக்கம், ஒண்டிகுடிசை  கிராமங்கள்.  ஒண்டிகுடிசை கிராமத்தில் மட்டும் 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.  இக்கிராம மக்கள் அவசர தேவைக்கும், ரேஷன் பொருட்கள் வாங்கவும், பல்வேறு சான்றுகள் பெற வி.ஏ.ஓ., அலுவலகத்துக்கும், கல்வி பயில உயர்நிலை பள்ளிக்கும் செஞ்சி ஏரிக்கரை வழியாக 3 கி.மீ. தூரத்தில் உள்ள செஞ்சி கிராமத்திற்கு வரவேண்டும்.  இந்த ஏரிக்கரை  சாலை   மண் சாலையாக உள்ளதால் மழை காலங்களில் நடந்து செல்பவர்கள் விழுந்து எழுந்து செல்ல வேண்டியுள்ளது.

இதையடுத்து, ஏரிக்கரையை அகலப்படுத்தி, 15 அடி தார்ச்சாலையாக  மாற்றக்கோரி அப்பகுதி மக்கள் பலமுறை ஒன்றிய அதிகாரிகள் மற்றும் மாவட்ட கலெக்டரிடம் மனுக்கள் கொடுத்தும்  எவ்வித நடவடிக்கையும் இல்லை.
இதுகுறித்து கடம்பத்தூர் ஒன்றிய அதிகாரிகளிடம் கேட்டதற்கு, ‘ஏரிக்கரை மீது தார்ச்சாலை அமைக்க பொதுப்பணி துறை அதிகாரிகள் அனுமதி வழங்க மறுக்கின்றனர்’ என கூறுகின்றனர். ஆனால், ‘’பொதுப்பணி துறை அதிகாரிகளோ, செஞ்சி ஏரிக்கரை மீது தார்ச்சாலை அமைக்க இதுவரை எவ்வித கடிதமும் வரவில்லை’ என கூறுகின்றனர். எனவே ஒண்டிகுடிசை கிராம மக்கள் நலன்கருதி செஞ்சி வரை ஏரிக்கரை மீது தார்ச்சாலை அமைக்க மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ரேஷன் பொருள் வாங்க  6 கி.மீ. நடந்து செல்லும் கிராம மக்கள்
கடம்பத்தூர் ஒன்றியம் செஞ்சி ஊராட்சிக்கு உட்பட்டது ஒண்டிகுடிசை கிராமம். இங்கு 750 பேர் வசிக்கின்றனர். 135 குடும்ப அட்டைகள், 15 முதியோர் ஓய்வூதிய அட்டைகள் உள்ளது. இக்கிராமத்தில் ரேஷன் கடை இல்லை. எனவே, குடும்ப அட்டை வைத்திருப்போர் அரிசி, பருப்பு, சர்க்கரை, மண்ணெண்ணெய் உள்ளிட்ட பொருட்கள் வாங்க 6 கி.மீ., தொலைவில் செஞ்சி கிராமத்தில் உள்ள ரேஷன் கடைக்கு வந்து செல்ல வேண்டியுள்ளது.
ஒண்டிகுடிசை கிராமத்திற்கு போக்குவரத்து வசதி இல்லாததால், ரேஷன் பொருள் வாங்க வருவோர், வாங்கிய பொருட்களை கொண்டு செல்ல சிரமப்படுகின்றனர். மேலும் இவர்கள் செஞ்சி ஏரிக்கரையின் மீது பொருட்களை சுமந்தபடி 6 கி.மீ., நடந்து செல்கின்றனர். முதியோர் ஓய்வூதிய அட்டைதாரர்கள் தாங்கள் பெற வேண்டிய அரிசியை வாங்க இயலாமல் சிரமப்படுகின்றனர். எனவே, கிராம மக்கள் நலன் கருதி, ஒண்டிகுடிசை கிராமத்தில் பகுதி நேர ரேஷன் கடை அமைக்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Tags : Kadambathur Union ,lake ,Gingee ,
× RELATED சென்னை குடிநீருக்கு ஆதாரமான வீராணம் ஏரி வறண்டது