பாலக்காடு, பிப். 5: மலப்புரம் அருகே சாலை தடுப்பு சுவரில் கார் மோதிய விபத்தில் மூன்று வாலிபர்கள் பலியாகினர்.கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் மோங்கம் பகுதியை சேர்ந்த பீரான்குட்டி மகன் உனைஷ் (25). கொண்டோட்டி பகுதியை சேர்ந்த அகமதுக்குட்டியின் மகன் சனூப் (29). மொரயூரைச் சேர்ந்த அப்துல் ரசாக் மகன் ஷிகாபுதீன் (28) ஆகியோர், நேற்று முன்தினம் காரில் கோழிக்கோட்டிலிருந்து, ராமநாட்டுக்கரை வழியாக மோங்கம் நோக்கி சென்றனர். அப்போது கார் திடீரென பிரேக் டவுனாகி டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையைவிட்டு விலகி ஓடியது. எதிர்பாராதவிதமாக தடுப்புசுவர் மீது கார் பலமாக மோதியது. இதில் மூன்று வாலிபர்களும் சம்பவ இடத்திலேயே பலியாகினர். இவர்களின் உடல்களை போலீசார் மீட்டு மஞ்சேரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பிரேத பரிசோதனைக்கு பிறகு உடல்களை போலீசார் நேற்று உறவினர்களிடம் ஒப்படைத்தனர். இந்த விபத்து குறித்து மஞ்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.