×

கருமத்தம்பட்டியில் தனியார் பேருந்து சிறை பிடிப்பு

சோமனூர்,பிப்.1: கோவையில் இருந்து திருப்பூர் நோக்கி சென்ற பேருந்தில் கருமத்தம்பட்டி பயணிகளை ஏற்ற மறுத்ததால் பொதுமக்கள் பேருந்தை சிறை பிடித்தனர். கோவையிலிருந்து கருமத்தம்பட்டி வழியாக நேற்று மாலை திருப்பூர் நோக்கி தனியார் பேருந்து ஒன்று புறப்பட்டது. கோவை காந்திபுரத்தில் இருந்து புறப்பட்ட இப்பேருந்தில் கருமத்தம்பட்டியை பயணிகள் சிலர் ஏறி அமர்ந்திருந்தனர். அப்போது கண்டக்டரும், டிரைவரும் பேருந்து கருமத்தம் பட்டியில் நிறுத்தப்பட மாட்டாது என்று கூறியதுடன், கருமத்தம்பட்டிக்கு ஏறிய பயணிகளை வலுகட்டாயமாக கீழே இறங்க வேண்டும் என்று தகாத வார்த்தையால் பேசி கீழே இறக்கி விட்டுள்ளனர். இதையடுத்து பேருந்தில் இருந்து இறக்கி விடப்பட்டவர்கள் சோமனூர் பகுதியில் உள்ள பொதுமக்ககளுக்கு தகவல் கொடுத்தனர். இந்நிலையில் மாலை 6 மணி அளவில் கருமத்தம்பட்டி நால்ரோட்டிற்கு வந்த அந்த தனியார் பேருந்து அங்கிருந்த பயணிகளை ஏற்றியது. இதையடுத்து காத்திருந்த பொதுமக்கள்  தனியார் பேருந்தை சிறைபிடித்தனர். காந்திபுரத்தில் பயணிகளை ஏற்றும் போது கருமத்தம்பட்டியில் நிற்காது எனக் கூறிவிட்டு, இங்கு வந்து கூடுதல் பயணிகளை ஏற்றி செல்ல முயன்றது ஏன் எனக் கேட்டு கண்டக்டர்,டிரைவர் இருவரையும் கண்டித்ததோடு, அவர்களை கருமத்தம்பட்டி  போலீஸ் ஸ்டேஷன் அழைத்து சென்று ஒப்படைத்தனர். போலீசார் தனியார் பேருந்து டிரைவர்,கண்டக்டரை எச்சரித்து அனுப்பினர். காலதாமதம் காரணமாக தனியார்  பேருந்தில் வந்த பயணிகள் பலர் மாற்று பேருந்தில் ஏறி சென்றனர்.

Tags : Karumathampatti ,
× RELATED கருமத்தம்பட்டி புனித ஜெபமாலை ஆலயத்தில் சமத்துவ பொங்கல் விளையாட்டு விழா