திருவாரூர், ஜன.25: திருவாரூர், நீடாமங்கலத்தில் புயல் நிவாரண தொகை வழங்க கோரி நேற்று பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கஜா புயல் காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் மிகப்பெரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அரசு சார்பில் நிவாரண பணிகளை மேற்கொண்டு வந்தாலும் இதுவரையில் பாதிக்கப்பட்ட பெரும்பாலான மக்களை நிவாரண தொகை மற்றும் நிவாரண பொருட்கள் சென்று சேரவில்லை. அதன்படி திருவாரூரில் அழகிரிநகர் உட்பட பல்வேறு பகுதிகளுக்கு இந்த நிவாரண தொகையானது நேற்று வரையில் கிடைக்காததை கண்டித்து அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பனகல் சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். இதன் காரணமாக அந்த பகுதியில் சுமார் அரை மணி நேரம் வரையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனையடுத்து டவுன் போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர், நகராட்சி ஊழியர்கள் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி நிவாரண தொகை விரைவில் கிடைப்பதற்கு ஏற்பாடு செய்வதாக உறுதியளித்ததன் பேரில் போராட்டமானது கைவிடப்பட்டது.
நீடாமங்கலம்: கஜா புயல் நிவாரணம் குளறுபடியால் நீடாமங்கலம் அருகே ராயபுரம் பாலம் அருகில் நேற்று பொது மக்கள் சாலை மறியல் ஈடுபட்டனர்.
நீடாமங்கலம் அருகேயுள்ள ராயபுரம், கீழப்பட்டு கிராமங்களில் பாதிக்கப்படாத மாடி வீடுகளுக்கு நிவாரணம் வழங்கப்படுகிறது. பாதிக்கப்பட்ட கூறை வீடுகளுக்கு நிவாரணம் வழங்கவில்லை என பலமுறை தாசில்தாரிடம் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தாசில்தாரை கேட்டால் கிராம நிர்வாக அலுவலரை கேளுங்கள் என்கிறார். கிராம நிர்வாக அலுவலரை தொடர்பு கொண்டால் போன் சுவிச்ஆப் செய்துவிட்டு கிராமப் பகுதிக்கே வருவதில்லை. இதனை கண்டித்து நேற்று காலை நீடாமங்கலம்-மன்னார்குடி சாலை ராயபுரம் பாலம் அருகில் ராயபுரம் கீழப்பட்டு கிராமத்தை சேர்ந்த புயலால் பாதிக்கப்பட்ட சுமார் 150 பேர் சாலை மறியலில் ஈடுபட்டனர். பிறகு நீடாமங்கலம் தாசில்தார் மலைமகள், இன்ஸ்பெக்டர் பழனிச்சாமி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மறியலில் ஈடுபட்டவர்களுடன் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் உடனடியாக வழங்கப்படும் என்று அதிகாரிகள் உறுதியளித்ததையடுத்து சாலை மறியல் கைவிடப்பட்டது.