காஞ்சிபுரம், ஜன. 23: காஞ்சிபுரம் வரதராஜபெருமாள் கோயில் தை மாதம் 3 நாள் தெப்ப உற்சவம் திருவிழா விமரிசையாக நடைபெற்றது. உலக பிரசித்தி பெற்ற காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் ஆண்டுதோறும் தை மாதத்தை ஒட்டி தை மாத தெப்போற்சவ திருவிழா 3 நாட்கள் நடைபெறுவது வழக்கம். இவ்விழாவில் முதல் நாள் அனந்தசரஸ் குளத்தில் 3 சுற்றும் இரண்டாம் 5 சுற்றும் மூன்றாம் நாளில் 7 சுற்றும் தெப்பலில் வரதராஜப்பெருமாள் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். அந்த வகையில் இந்த ஆண்டு தை மாத தெப்போற்சவம் திருவிழா வெகு விமரிசையாக தொடங்கியது. அதையொட்டி தெப்போற்சவ திருவிழாவின் முதல் நாளில் வண்ண வண்ண மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தெப்பலில் பெருந்தேவி தாயாருடன் வரதராஜ பெருமாள் உற்சவர் எழுந்தருளினார். பின்னர் சிறப்பு தீபாராதனைகள் காட்டப்பட்டது. இதையடுத்து முதல் நாள் தெப்போற்சவத்தையொட்டி தெப்பலில் 3 முறை வலம் வந்து திரண்டிருந்த திரளான பக்தர்களுக்கு காட்சியளித்து அருள்பாலித்தார். இந்த விழாவில் காஞ்சிபுரம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளிலிருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாளின் தரிசனத்தை பெற்று சென்றனர்.