அரியலூர், ஜன.10: திருமானூர் மணல் குவாரியை தடை செய்யக்கோரி அரியலூர் நகராட்சி தலைமை நீரேற்று நிலையத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.அரியலூர் மாவட்டம், திருமானூர் கொள்ளிடம் ஆற்றில் பல மாதங்களாக நடந்து வரும் மக்களின் போராட்டத்திற்கு மதிப்பளிக்காமல் இயங்கி வரும் அரசு மணல் குவாரியை நிரந்தரமாக தடை செய்ய வேண்டியும், மேலும் திருமானூர் பகுதி கொள்ளிடம் ஆற்றில் ஏற்கனவே மணல் குவாரி இயங்கிய இடத்தில், தஞ்சை ஸ்மார்ட் சிட்டிக்கு ராட்சத போர் மூலம் தண்ணீர் கொண்டு செல்ல இருக்கும் அரசின் முடிவை கைவிட கோரியும், திருமானூர் கொள்ளிடம் ஆற்றிலிருந்து, அரியலூர் நகராட்சிக்கு குடிநீர் செல்லும், திருமானூரில் உள்ள தலைமை நீரேற்றும் நிலையம் முன் கொள்ளிடம் நீராதார பாதுகாப்பு குழு மற்றும் பொதுமக்கள் முற்றுகை போராட்டம் நடத்தினர்.
முன்னதாக போராட்டக்காரர்கள் அனைவரும் திருமானூர் பழைய காவல் நிலையம் முன் ஊர்வலமாக கோஷங்கள் எழுப்பி கொண்டு வந்து திருமழபாடி சாலையில் உள்ள தலைமை நீரேற்றும் நிலையம் முன் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட கொள்ளிடம் நீராதார பாதுகாப்பு குழுவை சேர்ந்த தனபால், திருநாவுக்கரசு, பாஸ்கர் மாரியம்மாள், ஆறுமுகம், கைலாசம், ரவிசங்கர், ராமகிருஷ்ணன், வடிவேல்முருகன் உள்ளிட்ட 7 பெண்கள் உள்பட 44 பேரை போலீசார் கைது செய்து கீழப்பழூரில் உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.