மாமல்லபுரம், ஜன.9: புராதன சின்னங்களையொட்டி எல்இடி திரையில் விளக்கப்படத்தில் ஒளிபரப்பப்படுகிறது மாமல்லபுரத்தில் யுனெஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்ட கடற்கரை கோயில் உள்ளது. மேலும் பல்லவ மன்னர்களால் கட்டப்பட்ட ஒரே கல்லில் செதுக்கப்பட்ட ஐந்து ரதம், அர்ச்சுனன் தபசு, கலங்கரை விளக்கம், வெண்ணெய் உருண்டை கல் உள்ளிட்ட புராதனச் சின்னங்கள் உள்ளன.இவற்றைக் காண உலகம் முழுவதிலும் இருந்து சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இவர்களில் பலரும் புராதன வரலாற்றைத் தெரிந்து கொள்வதில் ஆர்வம் காட்டுகின்றனர். ஆனால் இதற்காக தொல்லியல் துறை அலுவலகம் வெளியிடும் விளக்க கையேடுகளை வாங்க வேண்டிய நிலை உள்ளது.
இதையடுத்து மாமல்லபுரத்திற்கு வரும் சுற்றுலாப் பயணிகள் அங்குள்ள புராதனச் சின்னங்களின் வரலாற்றை தெரிந்து கொள்ளும் வகையில் தமிழ், ஆங்கில மொழிகளில் எல்.இ.டி. திரை மூலம் விளக்கப்படம் திரையிட முடிவு செய்யப்பட்டது. தமிழகம் முழுவதும் தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள புராதனச் சின்னங்கள் குறித்த விளக்கப்படம் அடங்கிய மென்பொருள் தயாரிக்கப்பட்டு, அனைத்து சுற்றுலாத் தலங்களுக்கும் அனுப்பப்பட்டன. இதைதொடர்ந்து, மாமல்லபுரத்தில் நேற்று கடற்கரை கோயில் அருகில் எல்.இ.டி. திரை வைக்கப்பட்டு பொதுமக்களுக்கு அர்ப்பணிக்கப்பட்டது. விரைவில் அனைத்து புராதனச் சின்னங்களின் அருகிலும் எல்.இ.டி. திரைகள் அமைக்கப்படும் என தொல்லியல் துறையினர் தெரிவித்தனர்.