பொங்கலூர்,ஜன.8:திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே ஆறாக்குளம், முத்தாண்டிபாளையம்,பருவாய் உள்ளிட்ட கிராமங்களில் சுமார் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் வசித்து வருகின்றன.கடந்த முப்பது வருடங்களாக இந்த கிராமங்களுக்கு செல்ல பி18 என்ற டவுன் பஸ் ஒன்று இயங்கி வந்தது. இந்நிலையில் கடந்த ஒருவார காலமாக இப்பேருந்து இப்பகுதிகளுக்கு இயக்கப்படாததால் ஒன்றுதிரண்ட நான்கு கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் பல்லடம் அரசுப்போக்குவரத்துக் கழக பணிமனையை முற்றுகையிட்டு கிளை மேலாளரிடம் மனு அளிக்க முயன்றனர். மேலாளர் இல்லாததால் பணிமணை நுழைவின் குறுக்கே நின்ற பொதுமக்கள் பேருந்துகளை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து அவர்கள் கூறுகையில் கடந்த முப்பது வருடமாக பல்லடம்,காரணம்பேட்டை, சோமனூர்,சூலூர் போன்ற நகரங்களுக்கு சென்று வர பி18 என்ற டவுன் பஸ்ஸை பயன்படுத்தி வந்தோம்.எங்கள் பகுதிகள் கிராமப்பகுதிகள் என்பதால் இந்த பேருந்தை தவிர மற்ற பேருந்துகளும் இல்லை.எங்கள் ஊரில் கூலிவேலை செய்பவர்கள்,பனியன் தொழிற்சாலைக்கு வேலைக்கு செல்வோர்,பள்ளி மாணவ மாணவிகள் என இப்பேருந்தை பயன்படுத்தி வந்த நிலையில் கடந்த ஒருவார காலமாக இப்பேருந்து நடைக்குறைப்பு செய்யப்பட்டும்,பருவாய்,ஆறாக்குளம் பகுதிகளுக்கு முற்றிலும் நிறுத்தப்பட்டும் உள்ளது.இதனால் இப்பகுதி மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
எனவே அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு மீண்டும் பழைய கால அட்டவணைப்படி பேருந்தை இயக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.மேலும் இதுகுறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை எனில் அரசு போக்குவரத்தை கழக பணிமணையினுள் பேருந்துகளை அனுமதிக்க விடமாட்டோம் என்றும் அரசு போக்குவரத்த கழக நிர்வாகத்தை கண்டித்து சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபடுவதாகவும் கூறினர். இப்போராட்டத்தில் நான்கு கிராமங்களை சேர்ந்த பெண்கள் உள்பட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.