×

தண்டவாளத்தில் வாலிபர் சடலம் மீட்பு: கள்ளக்காதலி மீது உறவினர்கள் புகார்

ஆவடி, ஜன.8: ஆவடி அருகே திருநின்றவூரில் கள்ளகாதலியுடன் தங்கிருந்த வாலிபர் தண்டவாளத்தில் மர்மமான முறையில் இறந்துகிடந்தார். இவரது சாவில் சந்தேகம் உள்ளதாக உறவினர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.  ஆவடி அடுத்த பட்டாபிராம், சாஸ்திரி நகர், திருவள்ளுவர் தெருவை சேர்ந்தவர் சதீஷ்குமார் (28). திருநின்றவூர் அருகே நடுகுத்தகை கிராமத்தைச் சேர்ந்த பானுப்பிரியா (32) கணவனால் கைவிடப்பட்டவர். இவருக்கும் சதீஷ்குமாருக்கும் இடையில் கள்ளத்தொடர்பு இருந்ததாகக் கூறப்படுகிறது. இதற்கிடையில், சதீஷ்குமார் அவரது வீட்டுக்கு சரிவர செல்லாமல் பானுப்பிரியா வீட்டில் தங்கியிருந்து குடும்பம் நடத்தியதாகத் தெரிகிறது. இந்நிலையில், நேற்று காலை சதீஷ்குமார், திருநின்றவூர்-நெமிலிச்சேரி ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாளத்தில் சடலமாககிடந்தார்.

இதுகுறித்து ரயில்வே அதிகாரிகள் திருவள்ளூர் ரயில்வே போலீசில் புகார் அளித்தனர். இதனை அடுத்து, சப் இன்ஸ்பெக்டர் முனிநாதன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு  வந்தனர்.  போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.  இதற்கிடையில், சதீஷ்குமாரின் உறவினர்கள் போலீசாரிடம் கொடுத்துள்ள புகாரில் கூறியிருப்பதாவது, சதீஷ்குமார் மரணத்தில் சந்தேகம் உள்ளது. பானு பிரியாவை அழைத்து போலீசார் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர். புகாரின் அடிப்படையில், போலீசார் வழக்குப்பதிவு செய்து சதீஷ்குமார் கள்ளக்காதலி பானுப்பிரியாவுடன் ஏற்பட்ட தகராறில் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். கள்ளக்காதலியுடன் தங்கி இருந்த வாலிபர் மர்மமான முறையில் இறந்து கிடந்தது பட்டாபிராம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருத்தணி: திருத்தணி அடுத்த தரணிவராகபுரம் அருகே ரயில் தண்டவாளத்தின் கீழ் முக்கண் பாலம் அமைந்துள்ளது. இந்த பாலத்தின் அருகே நேற்று 50 வயது மதிக்கதக்க ஆண் சடலம் கிடந்ததை, அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து திருத்தணி போலீசார் மற்றும் கிராம நிர்வாக அலுவலருக்கு தகவல் கொடுத்தனர். அதைத்தொடர்ந்து, திருத்தணி போலீசார் மற்றும் அரக்கோணம் ரயில்வே போலீசார் சம்பவ இடத்துக்கு வந்தனர். சடலமாக கிடந்தவர் கட்டம் போட்ட சட்டையும், டவுசரும் அணிந்திருந்தார். அவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர் விவரங்கள் உடனடியாக தெரிய வில்லை. சடலத்தை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருத்தணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், போலீசார் வழக்கு பதிந்து, அவரை யாராவது அடித்து கொன்று சடலத்தை அங்கு வீசி சென்றார்களா? அல்லது விஷம் குடித்து இறந்தாரா என்ற கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.

Tags : Relatives ,
× RELATED குடும்பத்துடன் சுற்றுலா சென்றபோது...