பரமத்திவேலூர், ஜன.3: பரமத்திவேலூர் அடுத்துள்ள மறவர்பாளையத்தை சேர்ந்தவர் செல்வராஜ். அரசு பள்ளி ஆசிரியரான இவர், தாலுகா அலுவலகம் எதிரே உள்ள பாரதி நகரில் புதிதாக வீடு கட்டி வருகிறார். நேற்று முன்தினம் மாலை, புதிய வீட்டின் முன்பு தனது டூவீலரை நிறுத்திவிட்டு, வீட்டின் சுவருக்கு தண்ணீர் பாய்ச்சிக் கொண்டிருந்தார். அப்போது, செல்வராஜின் செல்போனை தொடர்பு ெகாண்ட போலீசார், புதன்சந்தை பகுதியில் செல்வராஜின் டூவீலர் விபத்துக்குள்ளானதாகவும், அதனை ஓட்டி வந்த வாலிபர் காயங்களுடன் நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர். இதனால் குழப்பமடைந்த செல்வராஜ், உடனே வெளியே வந்து பார்த்தபோது, டூவீலர் திருடு போயிருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து பரமத்திவேலூர் போலீசில் அவர் புகார் கொடுத்தார்.
இதையடுத்து, நாமக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வாலிபரிடம், போலீசார் விசாரணை நடத்தினர். அதில் அந்த சிறுவன் பீகார் மாநிலத்தை சேர்ந்தவன் என்பதும், அதே பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்ததும் தெரியவந்தது. மேலும், செல்வராஜின் டூவீலரை திருடிக்கொண்டு சென்ற போது, விபத்தில் சிக்கியது தெரியவந்தது. இந்த சிறுவன் வேறு இடங்களில் இதுபோல் வாகன திருட்டில் ஈடுபட்டானா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.