×

இடம் கிடைக்காமல் தவிப்பு கூடுதல் கலைக்கல்லூரிகள் திறக்கப்படுமா? மாணவர்கள் எதிர்பார்ப்பு

சிவகங்கை, ஜன.3:  சிவகங்கை மாவட்டத்தில் கலை, அறிவியல் கல்லூரிகளில் இடம் கிடைக்காமல் ஏராளமான மாணவ, மாணவிகள் பாதிப்படைந்து வருகின்றனர். சிவகங்கை மாவட்டத்தில் காரைக்குடி, பூலான்குறிச்சி, சிவகங்கை ஆகிய இடங்களில் இருபாலரும் படிக்கும் அரசு கலைக்கல்லூரியும், சிவகங்கையில் மகளிர் அரசு கலைக்கல்லூரியும் என மொத்தம் நான்கு அரசு கலை கல்லூரிகள், மூன்று அரசு உதவிபெறும் கல்லூரிகள், சில தனியார் கல்லூரிகள் மட்டுமே உள்ளன. இதில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்லூரிகளில் மட்டுமே பல்வேறு துறை சார்ந்த பாடப்பிரிவுகள் உள்ளன. இக்கல்லூரிகளில் சேர கடந்த சில ஆண்டுகளாக 10 ஆயிரத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பித்து வருகின்றனர். இக்கல்லூரிகளில் இளங்கலை பிரிவில் ஒரு பாடப்பிரிவிற்கு 40 இடங்கள் மட்டுமே உள்ளன. சில கல்லூரிகளில் சில இடங்கள் மட்டுமே கூடுதலாக உள்ளன. மொத்த கல்லூரிகளிலும் சேர்த்து 2 ஆயிரத்திற்கும் குறைவான இடங்களே உள்ளதால் ஐந்தில் நான்கு பங்கு மாணவர்களுக்கு இடம் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது.
பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை குறைவதையடுத்து கலை, அறிவியல் கல்லூரிகள் பக்கம் மாணவர்களின் கவனம் திரும்பியுள்ளது. கலை அறிவியல் பிரிவில் கணிதம், ஆங்கிலம், இயற்பியல், வேதியியல், வேளாண் உள்ளிட்ட பாடப்பிரிவுகளுக்கு கடுமையான போட்டி ஏற்பட்டுள்ளது.

ஆனால் போதிய கல்லூரிகள் இல்லாததால் கடந்த சில ஆண்டுகளாக இடம் கிடைக்காமல் மாணவர்கள் பாதிப்படைந்து வருகின்றனர். மாணவர்கள் கூறுகையில், ‘‘பொறியியல், ஆசிரியர் பணிகளுக்கான வேலை வாய்ப்புகள் குறைந்து வருவதாக கூறப்படுகிறது. கலை, அறிவியல் பாடப்பிரிவுகளை தேர்வு செய்தால் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் நடத்தப்படும் விஏஓ, குரூப் தேர்வுகள் மூலம் அரசுப்பணி கிடைக்கும் வாய்ப்புள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அரசு கல்லூரிகள் தொடங்கப்பட்ட காலத்தில் மேல்நிலைக்கல்வி முடித்து கல்லூரியில் சேரும் மாணவர்கள் எண்ணிக்கைக்கும் தற்போதைய மாணவர்கள் எண்ணிக்கைக்கும் மிகப்பெரிய அளவில் வித்தியாசம் உள்ளது. ஆனால் புதிதாக கல்லூரிகள் தொடங்கப்படவில்லை. இதனால் தற்போது போதிய இடங்கள் இல்லாமல் மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர். இதனால் சிலர் படிப்பை கைவிட்டு வேறு வேலைகளுக்கு செல்லும் நிலையும் ஏற்பட்டுள்ளது. எனவே இம்மாவட்டத்தில் அரசு சார்பில் கூடுதல் கலைக்கல்லூரிகள் மற்றும் வேளாண் கல்லூரி தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.

Tags : art galleries ,
× RELATED புதிதாக 10 கலைக்கல்லூரிகள் திறக்கப்படும் - தமிழ்நாடு அரசு