ராஜபாளையம், டிச. 20: ராஜபாளையம் பி.எஸ்.குமாரசாமிராஜா சாலையில் உள்ள ஸ்ரீராமகிருஷ்ண சேவா சங்கத்தில், சங்க 80வது ஆண்டு விழா மற்றும் சங்கத்தில் 60 ஆண்டு தலைவராக இருந்த முன்னாள் தலைவர், ராம்கோ நிறுவன சேர்மன் பி.ஆர்.ராமசுப்ரமண்யராஜாவின் உருவப்படத் திறப்பு விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பிஏசிஆர் அம்மணி அம்மாள் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவியர் இறைவணக்கம் பாடினர். விழா நாயகர்கள் ஐவர் குத்து விளக்கு ஏற்றினர். மதுரை ஸ்ரீராமகிருஷ்ண மடம் தலைவர் சுவாமி கமலாத்மானந்தஜி மஹராஜ் தலைமை வகித்தார். சங்கத் தலைவர் ராம்கோ சேர்மன் பி.ஆர்.வெங்கட்ராமராஜா வரவேற்றார். முன்னாள் தலைவர் ஸ்ரீதர்மரக்ஷகர் பி.ஆர்.ராமசுப்ரமண்யராஜாவின் திருவுருவப்படத்தை சுவாமி கௌதமானந்தஜி திறந்து வைத்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து கமலாத்மானந்தஜி, விமூர்த்தானந்தஜி, ஸ்ரீராமலிங்கா குரூப் சேர்மன் டி.ஆர்.தினகரன், ராம்கோ குரூப் சேர்மன் பி.ஆர். வெங்கட்ராமராஜா ஆகியோரும் ஸ்ரீதர்மரக்ஷகர் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
மதுரை ராமகிருஷ்ணா மடம் தலைவர் கமலாத்மானந்தஜி, சென்னை ராமகிருஷ்ண மடம் தலைவர் கௌதமானந்தஜி, சென்னை ராமகிருஷ்ண மடம் மானேஜர் விமூர்த்தானந்தஜி, ஸ்ரீராமலிங்கா குரூப் சேர்மன் டி.ஆர். தினகரன் ஆகியோர் பி.ஆர்.ராமசுப்ரமண்யராஜாவின் நற்பண்பு குறித்து பேசினர். முன்னதாக பொதுச்செயலாளர் ராமசுவாமிராஜா சார்பில், பேராசிரியர் ராதாகிருஷ்ணராஜா அறிக்கை வாசித்தார். பேராசிரியர் ராதாகிருஷ்ணன் நன்றி கூறினார்.இவ்விழாவில் ஸ்ரீராமகிருஷ்ணர்-சாரதா தேவி பக்தர்கன், நகர்பிரமுகர்கள், தொழிலதிபர்கள், வர்த்தகர்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை ராஜபாளையம் ஸ்ரீராம கிருஷ்ண சேவா சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் செய்திருந்தனர்.