×

தியாகதுருகம் அருகே 10 ஆண்டுகளாக பழுதடைந்து கிடக்கும் மின்மாற்றியை சீரமைக்க கோரிக்கை

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அடுத்த பல்லகச்சேரி கிராம காலனி பகுதியில் சுமார் 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். அந்த பகுதியில் மின்தடை ஏற்படாமல் இருக்கும் விதமாக கடந்த 2009ம் ஆண்டு புதியதாக மின்மாற்றி அமைக்கப்பட்டது. அந்த மின்மாற்றி மூலம் அப்பகுதியில் உள்ள வீடுகளுக்கு மின் இணைப்புகள் வழங்கப்பட்டன. அதனை தொடர்ந்து அந்த கிராம பகுதியில் தடையில்லாத மின்சாரம் வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த 2010ம் ஆண்டில் புதியதாக அமைக்கப்பட்ட மின்மாற்றி பழுதானது. இதுவரை அது சரிசெய்யப்படாமல் கடந்த 10 ஆண்டுகளாகவே மின்மாற்றி பழுதடைந்த நிலையில் பயன்படுத்தப்படாமல் பராமரிப்பின்றி உள்ளது. இதற்கு பதிலாக அதே பகுதியில் உள்ள விவசாய நிலத்திற்கு பயன்படுத்தப்படுகின்ற மின்மாற்றிக்கு கிராம பகுதியில் உள்ள வீட்டு மின் இணைப்புகள் மாற்றியமைக்கப்பட்டன. ஒரே மின்மாற்றியில் கூடுதல் மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளதால் குறைந்த மின் அழுத்தம் ஏற்பட்டு அடிக்கடி கிராம பகுதியில் மின்தடை ஏற்படுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். சேதமடைந்த மின்கம்பங்களை சரி செய்யவும், பழுதடைந்த மின்மாற்றியை பழுது நீக்கம் செய்வதற்காக கடந்த 10 நாட்களாக பராமரிப்பு பணிகள் மேற்கொண்டு வந்த நிலையில் பல்லகச்சேரி கிராம காலனி பகுதியில் பழுதடைந்த மின்மாற்றியை பழுது நீக்கம் செய்யாமல் அதிகாரிகள் அலட்சியம் காட்டி வருவதாகவும் பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். எனவே, பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு பழுதடைந்த நிலையில் பராமரிப்பின்றி பயன்படுத்தப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ள மின்மாற்றியை சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வர மாவட்ட மின்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்….

The post தியாகதுருகம் அருகே 10 ஆண்டுகளாக பழுதடைந்து கிடக்கும் மின்மாற்றியை சீரமைக்க கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Thiagadurugam ,Kallakurichi ,Pallagacherry Village Colony ,Thyagathurugam ,Kallamkurichi ,Dinakaran ,
× RELATED கள்ளக்குறிச்சி மாணவி மதி மரண...