கூடுவாஞ்சேரி, டிச.18:நந்திவரம், கூடுவாஞ்சேரி பேரூராட்சியில் தனியார் நிறுவனம் மூலம் ரூ.8லட்சம் மதிப்பில் புதிதாக அமைக்கப்பட்ட சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையத்தை திமுக ஒன்றிய செயலாளர் திறந்து வைத்தார். சென்னை அடுத்த நந்திவரம், கூடுவாஞ்சேரி பேரூராட்சிக்கு உட்பட்ட நந்தீஸ்வரர் திருக்கோயில் அருகில் நந்தீஸ்வரர் காலனி உள்ளது. இப்பகுதியில் குடிநீர் பற்றாக்குறை வெகு காலமாக இருந்து வந்தது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க கோரி சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் அப்பகுதி மக்கள் பலமுறை முறையிட்டும் பயனில்லை. இதனையடுத்து நந்திவரத்தில் உள்ள பிரபல ஏற்றுமதி நிறுவனமான “இன்டிமேட் பேஷன்ஸ்” நிறுவனத்திடம் பேரூராட்சி திமுக முன்னாள் துணை தலைவர் கே.பி.ஜார்ஜ் தலைமையில் அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர்.
அதன் பேரில் ரூ.8லட்சம் மதிப்பில் மின் மோட்டாருடன் கூடிய சுத்திகரிக்கப்பட்ட புதிய குடிநீர் நிலையம் நந்தீஸ்வரர் திருக்கோயிலில் அமைக்கப்பட்டு அதன் திறப்பு விழா நடைபெற்றது. விழாவுக்கு பேரூராட்சி மன்ற திமுக முன்னாள் துணை தலைவர் கே.பி.ஜார்ஜ் தலைமை தாங்கினார்.சிறப்பு அழைப்பாளராக காட்டாங்கொளத்தூர் திமுக ஒன்றிய செயலாளரும், முன்னாள் பேரூராட்சி மன்ற தலைவருமான எம்.கே.தண்டபாணி சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையத்தை திறந்து வைத்தார். இதில் தனியார் நிறுவன இயக்குநர் பழனிவேல், மேலாளர்கள் சரவணன், டேவிட் உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.