×

அதிகாரிகளின் அலட்சியத்தால் ஊராட்சிக்கு வருவாய் தரும் கம்பர் கோட்டம் முடக்கம் சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை

மயிலாடுதுறை,டிச.18: அதிகாரிகளின் அலட்சியத்தால் ஊராட்சிக்கு வருவாய் தரும் கம்பர் கோட்டம் முடக்கப்பட்டுள்ளது. எனவே அதை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.நாகை மாவட்டம் குத்தாலம் தாலுகா தேரழுந்தூரில் கம்பீரமான கம்பர் கோட்டம் உள்ளது. கிபி 12ம் நூற்றாண்டில் கம்ப ராமாயணத்தை இயற்றிய கம்பர் பிறந்த ஊர் தேரழுந்தூர். கம்பர் பிறந்த ஊரை போற்றும் வகையில் ஏற்கனவே அவர் பிறந்தவீடு  இருந்த இடத்தை கம்பர் மேடு என அடையாளம் கண்டு அவற்றை இந்திய தொல்லியல் துறையினர் கைப்பற்றி தங்கள் வசம் வைத்துள்ளனர். கம்பருக்கு கோட்டம் கட்ட வேண்டும் என்ற எண்ணத்தில் அவரது பெயரில் 1984ம் ஆண்டு 2 ஏக்கர் பரப்பளவில் கம்பர் கோட்டம் கம்பர் மேட்டுப்பகுதிக்கு அருகில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் கட்டப்பட்டது.

அந்த கம்பர்கோட்டத்தை 1999ம் ஆண்டு குத்தாலம் ஊராட்சி ஒன்றிய அலுவலக நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது. அதன்பிறகு மேலும் கட்டுமானங்கள் நடைபெற்று கட்டிடத்தின் ஒரு பகுதி நூலகம் மற்றொரு பகுதியில் திருமண மண்டபமும் அமைக்கப்பட்டது. அங்கே  கம்பர் சிலையும் அமைக்கப்பட்டது, ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் மிக குறைந்த கட்டணத்தில் திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகள் கட்சி கூட்டம் தவிர்த்த மற்ற பொது நிகழ்ச்சிகள், கம்பன் விழா நிகழ்ச்சியை நடத்த வாடகைக்கு விடப்பட்டு மிகவும் பயனுள்ளதாகவும் ஊராட்சி ஒன்றியத்திற்கு வருமானத்தை ஈட்டும் கட்டிடமாக இருந்தது.பலமாதமாக கம்பர் கோட்டம் மிகவும் சேதமடைந்து மோசமான நிலைக்கு சென்றுள்ளது, கட்டிடத்தின் உறுதித்தன்மை படிப்படியாக குறைய ஆரம்பித்துள்ளது, மேலும் அந்த விரிசல் பகுதி உள்ள மாடியின் மீது அரசமரம் வேப்ப மரங்கள் வளர்ந்து அதன்வேர்பகுதிகள் சென்ற இடங்களில் விரிசல் ஏற்பட்டுள்ளது. கம்பர் கோட்டத்தில் இருந்த மின்விசிறிகளைக்கூட குத்தாலம் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் எடுத்து சென்றுவிட்டனர். தங்கள் பயன்பாட்டிற்கு எடுத்து சென்றுள்ளனர்.

இதுகுறித்து குத்தாலம் ஊராட்சி ஒன்றிய ஆணையரிடம்  பலமுறை முறையிட்டும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.  ஒரு பக்கம் கம்பர் பிறந்த இடமான கம்பர் மேடு பகுதியை இந்திய அரசின் தொல்லியல் துறையினர் கைப்பற்றி கம்பி வேலி அமைத்து இன்றைக்கு கேட்பாரற்று கிடக்கிறது, அதே கதிதான் இந்த கம்பர் கோட்டத்திற்கும் நடந்து வருகிறது, ஊராட்சி ஒன்றியத்திற்கு வருமானம் தரக்கூடிய கம்பர் கோட்டத்தை குத்தாலம் ஊராட்சி ஒன்றிய அலுவலக அதிகாரிகள் வேண்டுமென்றே முடக்கியுள்ளனர்.
உடனடியாக கம்பர் கோட்டத்தில் முளைத்துள்ள மரங்களை அகற்றிவிட்டு மீண்டும் அலங்கார பொருட்களை வைத்து, மின்விளக்கு மற்றும் மின்விசிறி போன்றவற்றை வைத்து நடைமுறைக்கு கொண்டுவருவதுடன் இரவு பகல் காவலர்களையும் நியமிக்க வேண்டும் என்று பொதுமக்கள் நாகை மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Citizens ,division ,Kambar ,
× RELATED காங்கிரஸ் கட்சியின் வெளிநாடு வாழ்...