கரூர்,டிச.7: கரூர் திருமாநிலையூர் கிளை வாய்க்காலில் போலீஸ் பாதுகாப்புடன் நேற்று ஆக்ர மிப்புகள் அகற்றப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கரூர் செல்லாண்டிபாளையம் பகுதியில் இருந்து ராயனுார் உட்பட பல்வேறு பகுதிகளை நோக்கி சென்று வந்த திருமாநிலையூர் கிளை வாய்க்காலில் பல பகுதிகளில் ஆக்ரமிப்பு உள்ளது என்ற விவசாயிகள் மத்தியில் குற்றச்சாட்டு எழுந்தது. கடந்தஆண்டு பொதுப்பணித் துறையினர் இந்த வாய்க்காலில் ஏற்பட்டிருந்த ஆக்ரமிப்புகளை பொக்லைன் மூலம் அகற்றும் பணியில் ஈடுபட்டனர். இதற்கு பலர் எதிர்ப்பு தெரிவித்ததால் அந்த பணி நிறுத்தப்பட்டது.
தற்போது, மீண்டும் நேற்று காலை செல்லாண்டிபாளையம் காமராஜ் ரோடு பகுதியின் வழியாக செல்லும் திருமாநிலையூர் கிளை வாய்க்காலில் ஏற்பட்டுள்ள ஆக்ரமிப்புகளை பொதுப்பணித்துறை அதிகாரிகள் முன்னிலையில் ஊழியர்கள் பொக்லைன் மூலம் அகற்றும் பணியை மேற் கொண் டனர். சுமார் 400மீ துாரத்துக்கு வாய்க்காலில் உள்ள ஆக்ரமிப்புகள் அதிரடியாக அகற்றப்பட்ட போது, பசுபதிபாளையம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்ததால் இந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. மேலும், தொடர்ந்து, நீர்நிலைகளில் ஏற்பட்டுள்ள ஆக்ரமிப்புகளும் விரைவில் அகற்றப்படும் என பொதுப்
பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.