கீழ்வேளூர்,டிச.6: கீழ்வேளூரில் பேருந்து நிறுத்தத்தில் நிழற்குடை இல்லாததால் பயணிகள் கடும் அவதிப்படுகிறார்கள். எனவே விரைவில் நிழற்குடை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரி்ககை விடுத்துள்ளனர்.நாகை மாவட்டம் கீழ்வேளூர் அருகே தேவூர், ராதாமங்கலம், இலுப்பூர், பட்டமங்கலம், கோகூர், வடகரை, ஆனைமஙகலம், எரவாஞ்சேரி, கடம்பங்குடி, ஓர்குடி, அகரகடம்பனூர் என பல்வேறு கிராமங்களை சேர்ந்த பள்ளிக்கு செல்லும் மாணவ, மாணவிகள், அரசு மற்றும் தனியார் பணியில் உள்ள ஊழியர்கள் நாகை, திருவாருர் நாகைக்கு செல்ல கீழ்வேளூரில் இருந்து தான் செல்ல வேண்டும். கீழ்வேளூரில் இருந்து தினம் தோறும் நாகை, திருவாரூர் மற்றும் அதன் வழியாக பல்வேறு முக்கிய கிராமங்களுக்கு செல்ல கீழ்வேளூரைதான் பயன்படுத்தி வருகின்றனர்.
விரைவு பேருந்து, எக்ஸ்பரஸ் போன்ற பேருந்துகள் நின்று செல்லும் முக்கியமான பேருந்து நிறுத்தம் கீழ்வேளூர் என்பதால் அதிக பயணிகள் கீழ்வேளூர் பேருந்து நிறுத்தத்தை பயன்படுத்துகின்றனர். நாகை- திருவாரூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கீழ்வேளூர் பேருந்து நிறுத்தத்தில் பயணிகளுக்கு நிழற்குடை இல்லை. இதனால் கீழ்வேளூர் பேருந்து நிறுத்தத்தில் இருந்து செல்லும் பயணிகள் வெயிலில் நின்றும், மழையில் நனைந்தப்படியும் இருந்து தான் பேருந்துக்கு செல்ல வேண்டியுள்ளது. மழை பெய்யும் போது அருகில் உள்ள கடைகளில் நிற்கும் அளவிற்கு இடம் இல்லாததால் பயணிகள் மழையில் நனைந்த நிலையில் தான் பேருந்தில் ஏறி செல்கின்றனர். கீழ்வேளூரில் வட்டாட்சியர் அலுவலகம், வட்டார வளர்ச்சி அலுவலகம், பேரூராட்சி அலுவலகம், கருவூலகம், வேளாண் விரிவாக்க மையம், தொடக்க கல்வி அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகங்களுக்கு ஏராளமான பொதுமக்கள் வந்து செல்கின்றனர். தினம் தோறும் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் கீழ்வேளூர் பேருந்து நிறுத்தத்தில் இருந்து பயணிக்கின்ற நிலையில் கீழ்வேளூரில் பேருந்து நிழற்குடை வசதி இல்லாதது பொது மக்களுக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது. உடன் கீழ்வேளூரில் பேருந்து நிழற்குடை அமைத்திட தமிழக அரசும், மாவட்ட நிர்வாமும், தேசிய நெடுஞ்சாலை துறையினரும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொது மக்களும், பேருந்து பயணிகளும் எதிர்பாக்கின்றனர்.