கடையம், டிச. 6: ஆழ்வார்குறிச்சி பரமகல்யாணி மேல்நிலைப்பள்ளியின் 58வது விளையாட்டு விழா நடந்தது. தலைமை ஆசிரியர் செல்வராஜ் வரவேற்றார். அம்பை டிஎஸ்பி ஜாகீர் உசேன் தலைமை வகித்து பேசினார். உடற்கல்வி ஆசிரியை சண்முகத்தாய் ஆண்டறிக்கை வாசித்தார். பள்ளி செயலர் தேவராஜன், பள்ளி தனி அலுவலர் சுந்தரம், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் பார்வதிகுமார் மற்றும் ஆழ்வார்குறிச்சி எஸ்ஐ தினேஷ்குமார் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். சிலம்பம், கராத்தே கலைகளை மாணவர்கள் செய்து காட்டினர். தேசிய மாணவர் படை, நாட்டுநலப்பணித்திட்டம், தேசிய பசுமைப்படை, சாரணர் இயக்கம் மற்றும் இளையோர் செஞ்சுலுவை சங்க மாணவ- மாணவிகளின் அணிவகுப்பு மற்றும் கூட்டு உடற்பயிற்சி நடந்தது. கண்கவரும் விளையாட்டு தொடர்பான கலைநிகழ்சிகளும் இடம்பெற்றன. மேலும் பெற்றோர் மற்றும் ஆசிரியர்களுக்கான விளையாட்டு போட்டிகளும் நடைபெற்றன.
விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை டிஎஸ்பி ஜாகீர்உசேன் வழங்கினார். நிகழ்ச்சிகளை ஆசிரியர்கள் முத்துவேலன், பாலசுப்பிரமணியன் மற்றும் ஆசிரியை ஜெயந்தி தொகுத்து வழங்கினர். விழாவில் உடற்கல்வி ஆசிரியர்கள் சீதாராமன், ஆறுமுகம், ஆசிரிய- ஆசிரியைகள், அலுவலக பணியாளர்கள், பெற்றோர் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.