தா.பேட்டை, நவ.30: முசிறி அருகே ஆமூர் பகுதியில் பாசன வாய்க்காலை தூர்வார வேண்டுமென அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
முசிறி பகுதியில் பாசனத்திற்காக காவிரி ஆற்றிலிருந்து பல்வேறு கிளை வாய்க்கால்கள் செல்கிறது. இதன் மூலம் ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பிலான விவசாய நிலங்கள் பயன் பெறுகின்றன. ஆமூர் பகுதியில் செல்லும் நவாமரத்து வாயக்காலை விவசாயிகள் தூர்வார வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து விவசாயி ஸ்டாலின் கூறும்போது, பாசனத்திற்கு தேவையான தண்ணீர் கடைமடை பகுதி வரை செல்வதற்கு வாய்க்காலை தூர்வார வேண்டும். ஆற்றுப்பாசன கோட்ட அலுவலர்கள் இதற்குரிய நிதியை பெற்று வாய்க்காலின் ஓரங்களை உயர்த்தி குப்பைகளை அகற்றி வாய்க்காலை தூர்வார வேண்டுமென தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.
பெயரளவிற்கே இப்பணிகள் நடைபெறுவதால் கடைமடை பகுதி வரை தண்ணீர் செல்வதில் சிரமம் ஏற்படுகிறது. இதனால் பாசனத்திற்கு தேவையான தண்ணீர் வருவதில்லை. வாய்க்காலில் வரும் தண்ணீர் கடைமடை பகுதியில் விவசாயம் மேற்கொள்ளும் விவசாயிகள் பயன்பெறும் வகையில் வாய்க்கால் தலைப்பிலிருந்து கடைசி வரை தூர்வார வேண்டும் என்று கூறினார்.