கரூர், நவ. 30: கரூர் மருத்துவக்கல்லூரி டீனை கண்டித்து போராட்டம் நடத்திய அரசு ஊழியர்கள் 70 பேரை போலீசார் கைது செய்தனர்.
கரூர் அரசு மருத்துவ கல்லூரி டீன் டாக்டர் ரோசி வெண்ணிலாவிடம் ஊழியர்களின் பிரதிநிதிகள் பிரச்னைகள் தொடர்பாக முறையிட்டதாகவும், ஆனால் அவர் பிரச்னைகளுக்கு தீர்வு கண்டு சுமூகநிலை ஏற்படுத்துவதற்கு பதிலாக இரண்டு ஊழியர்களை தொலைதூர இடங்களுக்கு மாற்றியதாகவும், கோப்புகளில் கையெழுத்திட பல மணி நேரம் காக்க வைப்பது, நிர்வாக பணிகளை பகிர்ந்தளிக்காமல் வானளாவிய அதிகாரம் படைத்தவராக நடந்து கொள்வது போன்றவற்றை கண்டித்தும் நேற்று கரூர் மாவட்ட அரசு ஊழியர் சங்க்தினர் மருத்துவ கல்லூரி மருத்துவமனை முன் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
மாவட்ட தலைவர் மகாவிஷ்ணன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் சக்திவேல் விளக்கயுரையாற்றினார். மாநில துணைத் தலைவர் சுப்பிரமணியன், மாநில பொதுச்செயலாளர் அன்பரசு ஆகியோர் கண்டன உரையாற்றினர். ஜெயராம் நன்றி கூறினார். தோழமை சங்க நிர்வாகிகள் அரசு ஊரியர்கள் கலந்து கொண்டனர். அப்போது டவுன் போலீசார் அங்கு வந்து அனுமதியின்றி போராட்டம் நடத்தியதாக கூறி 70 பேரை கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்கள் போலீஸ் வேனில் ஏற்றி திருமண மண்டபத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர்.