பரமத்திவேலூர், நவ.30: பரமத்திவேலூர் அடுத்த வெங்கமேட்டில் செயல்பட்டு வரும் சேலம் வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் கொப்பரை தேங்காய் மற்றும் நிலக்கடலை ஏலம் நடைபெற்றது. பரமத்திவேலூர், கபிலர்மலை, ஜேடர்பாளையம் சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் 778 கிலோ கொப்பரை தேங்காயை ஏலத்துக்கு கொண்டு வந்திருந்தனர். இதை வாங்க சேலம், ஈரோடு, நாமக்கல்லைச் சேர்ந்த வியாபாரிகள் வந்திருந்தனர். கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் கொப்பரை தேங்காய் ஒரு கிலோ அதிகபட்சமாக 93.72க்கும், குறைந்தபட்சமாக 89.39க்கும், சராசரி விலையாக 91.13க்கும் ஏலம் போனது. ஒட்டுமொத்தமாக விவசாயிகள் கொண்டு வந்த 553 கிலோ கொப்பரை தேங்காய் 47 ஆயிரத்து 419 ரூபாய்க்கு விற்பனையானது.
நேற்றைய ஏலத்திற்கு கொப்பரை தேங்காய் ஒரு கிலோ 94.29க்கும், குறைந்தபட்சமாக 91.66க்கும், சராசரி விலையாக 92.27க்கும் ஏலம் போனது. ஒட்டு மொத்தமாக விவசாயிகள் கொண்டு வந்த 778 கிலோ கொப்பரை தேங்காய் 63 ஆயிரத்துக்கு விற்பனையானது. கடந்த வாரங்களை விட நேற்று கொப்பரை தேங்காய் வரத்து சற்று அதிகரித்த நிலையில், விலையும் கனிசமாக அதிகரித்ததால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர். இதேபோல், நேற்று விவசாயிகள் 442 கிலோ நிலக்கடலையை ஏலத்துக்கு கொண்டு வந்திருந்தனர். நிலக்கடலை ஒரு கிலோ அதிகபட்சமாக 42.30க்கும், குறைந்தபட்சமாக 40க்கும், சராசரி விலையாக 41.50க்கும் விற்பனையானது. ஒட்டு மொத்தமாக 18 ஆயிரத்து 52க்கு வர்த்தகம் நடைபெற்றது.