×

சேத்தியாத்தோப்பு அருகே பின்னலூரில் இடியும் அபாய நிலையில் நீர்த்தேக்க தொட்டி

சேத்தியாத்தோப்பு, நவ. 30: சேத்தியாத்தோப்பு அருகே பின்னலூர் கிராமத்தில் இடிந்து விழும் நிலையில்குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி உள்ளது. இதனால் கிராம மக்கள் அச்சத்துடன் வசித்து வருகின்றனர். கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே பின்னலூர் கிராமம் உள்ளது. இது புவனகிரி மேற்கு ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கிராம ஊராட்சி ஆகும். இங்குள்ள சிவன்கோயில் பேருந்து நிறுத்தம் அருகில் உள்ள குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியானது இடிந்து விழும் அபாயத்தில் இருக்கிறது. மேலும் இந்த நீர்த்தேக்க தொட்டியின் மேல் மூடப்பட்டிருந்த சிமெண்ட் சிலாப் இடிந்து குடிநீர் தொட்டிக்குள்ளே விழுந்துள்ளது. இதனால் குடிநீர் தொட்டியின் மேல்பகுதி திறந்தே இருக்கிறது. பறவைகளின் எச்சங்களுடன், பாசி படர்ந்து காணப்படுவதால் நீர்த்தேக்க தொட்டியில் இருக்கும் குடிநீரானது குடிப்பதற்கே லாயக்கற்றதாக இருக்கிறது.

சுமார் ஒரு லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட இந்த நீர்த்தேக்க தொட்டியானது சுத்தம் செய்து பல ஆண்டுகள் ஆகிறது. மாசடைந்த இந்த நீர்த்தேக்க தொட்டியிலிருந்து தான் தற்போதும் கிராம மக்களுக்கு குடிநீர் விநியோகம் நடந்து வருகிறது. இதனால் தொற்று நோய்கள் ஏற்பட காரணமாகவும், பல உடல்நலக் கோளாறுகளை ஏற்படுத்தும் விதமாக இருக்கும் இந்த தண்ணீரைத்தான் கிராமமக்கள் பயன்படுத்தி வருகின்றனர். தற்போது நீர்த்தேக்க தொட்டி மேலும், பழுதடைந்து அதன் பில்லர்களில் விரிசல் ஏற்பட்டுள்ளது. பல பகுதிகளில் சிமெண்ட் காரைகள் பெயர்ந்தும் விழுந்துள்ளது. இது எப்போது வேண்டுமானாலும் இடிந்துவிழும் அபாய நிலையில் இருக்கிறது. இதன் அருகில் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள குடியிருப்புக்கள், பேருந்து நிறுத்தம், நூலகம் உள்ளது. இதனால் பின்னலூர் கிராமமக்கள் அச்சத்துடன் வசித்து வருகின்றனர். இடிந்து விழுந்து அசம்பாவிதங்கள் ஏற்படும் முன் இதனை முழுவதுமாக இடித்து அகற்றிவிட்டு புதியதாக மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை கட்டவேண்டும் என்று மாவட்ட நிர்வாகத்திடமும், புவனகிரி மேற்கு ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளிடமும் தெரிவித்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை.

இதுபோன்று இதன் அருகில் உள்ள விஏஓ கட்டிடமும் எப்போது வேண்டுமானாலும் இடியும் நிலையில் சிமெண்ட் காரைகள் பெயர்ந்துவிழுந்து வருகிறது. இதனையும் மாற்றி புதிய கட்டிடம் கட்டவேண்டும். இப்பகுதியில் இரவு நேரங்களில் மர்மநபர்கள் மது அருந்தும் பாராக பயன்படுத்துவதால் இவ்விடம் முழுவதும் பிளாஸ்டிக் குப்பைகளால் துர்நாற்றம் வீசுவதாகவும், அருகிலுள்ள குடியிருப்புகளில் வசிக்க முடியாத நிலை உள்ளதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து விரைந்து இந்த நீர்த்தேக்க தொட்டியையும், விஏஓ கட்டிடத்தையும் இடித்துவிட்டு புதிய கட்டிடம் கட்டவேண்டும் என்று வலியுறுத்தி உள்ளனர்.

Tags : collapse ,backyard ,Sethiyatope ,
× RELATED தங்கச்சுரங்கம் இடிந்து விழுந்த...