கொள்ளிடம், நவ.29: நாகை மாவட்டம் கொள்ளிடம் அருகே ஆச்சாள்புரம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளிக்கு ரூ.4 லட்சம் மதிப்பீட்டில் தன்னிறைவு திட்டத்தின் கீழ் கடந்த 2015 ஆம் ஆண்டு புதியதாக கழிவறைக் கட்டிடம் கட்டப்பட்டது. கட்டி முடிக்கப்பட்டதிலிருந்து இக்கட்டிடம் பூட்டியே கிடக்கிறது. இப்பள்ளியில் படிக்கும் 250 மாண்வர்களுக்கென்று இயங்கி வந்த பழைய கழிவறைக் கட்டிடம் இடிந்து விழுந்து எந்த பயனும் இல்லாத நிலையில் உள்ளதால், பள்ளி மாணவர்கள் போதிய கழிவறை வசதியின்றி அவதிப்படுகின்றனர். 3 ஆண்டுகளாக திறக்காமல் உள்ள கழிவறைக் கட்டிடத்தை திறக்க பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் சார்பில் பலமுறை அதிகாரிகளுக்கு தெரிவித்தும் இதுவரை திறக்க நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே மாணவர்களின் நலன் கருதி உடனடியாகக் கழிவறைக் கட்டிடத்தை திறந்து பயன்பாட்டிற்கு கொண்டு வர உடனடியாக நடவடிக்கை எடுகக் வேண்டும் என்று பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.