×

அண்ணாமலையார் கோயில் உண்டியல் காணிக்கை 1.74 கோடி கார்த்திகை மகாதீப விழா முடிந்தது

திருவண்ணாமலை, நவ.29: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீப உண்டியல் காணிக்கையாக ₹1.74 கோடி கிடைத்தது. திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை தீபத்திருவிழா 10 நாட்கள் சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு கார்த்திகை தீபத்திருவிழா கடந்த 14ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய திருவிழாவான கார்த்திகை தீபத்திருவிழா கடந்த 23ம் தேதி கொண்டாடப்பட்டது. அன்று அதிகாலை 4 மணிக்கு பரணி தீபமும், மாலை 6 மணிக்கு கோயிலின் பின்புறமுள்ள 2,668 அடி உயர மலையில் மகா தீபமும் ஏற்றப்பட்டது. இவ்விழாவில் இந்தியா முழுவதும் இருந்து சுமார் 20 லட்சம் பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

அண்ணாமலையார் கோயிலில் ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி முடிந்ததும் உண்டியல் எண்ணப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு கார்த்திகை தீபம் மற்றும் பவுர்ணமி உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நேற்று திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் திருக்கல்யாண மண்டபத்தில் நடைபெற்றது. கோயில் இணை ஆணையர் ஞானசேகர் மேற்பார்வையில் நடைபெற்ற இப்பணியில் சுமார் 150 பேர் ஈடுபட்டனர். காலையில் தொடங்கிய காணிக்கை எண்ணும் பணி இரவு வரை நடைபெற்றது. இதில் உண்டியல் காணிக்கையாக ₹1 கோடியே 74 லட்சத்து 59 ஆயிரத்து 151ம், 274 கிராம் தங்கமும், 1,444 கிராம் வெள்ளியும் கிடைத்தது.

Tags : Annamalaiyar Temple Undertilance ,ceremony ,Karthikai Mahadeepa ,
× RELATED பொன்னமராவதி அருகே புதுப்பட்டியில்...