தூத்துக்குடி, நவ. 28: தூத்துக்குடி அண்ணாநகரில் உள்ள சலவை துறையில் மழைநீருடன் கழிவு நீர் தேங்கியுள்ளதால் தொழில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக சலவையாளர்கள் கலெக்டரிடம் புகார் அளித்தனர். தூத்துக்குடி மாவட்ட சலவைத்தொழிலாளர் சங்கத்தினர் மாவட்டத் தலைவர் சண்முகசுந்தரம் தலைமையில் கலெக்டர் அலுவலகத்தைமுற்றுகையிட்டனர். பின்னர் கலெக்டர் சந்தீப் நந்தூரியிடம் அளித்த மனுவில் கூறியுள்ளதாவது: சலவைத் தொழிலாளர்கள் 17 மாநிலங்கள், 3 யூனியன் பிரதேசங்கள் தமிழகத்தில் கன்னியாகுமரி மாவட்டம், நெல்லை மாவட்டத்தில் செங்கோட்டை வட்டம் ஆகிய இடங்களில் தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் உள்ளனர்.
எனவே தமிழகத்தில் உள்ள வண்ணார் சமுதாயத்தை (சலவையாளர்கள்) ஒரே சீராக தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்ப வேண்டும், தூத்துக்குடி அண்ணாநகர் சலவைத்துறையில், மழைநீர், சாக்கடை நீர் தேங்கி அசுத்தமாக உள்ளது. இதை உடனடியாக சீரமைத்துதர வேண்டும். மேலும் தூத்துக்குடியில் 300 குடும்பங்கள் சலவை தொழில் செய்து வருகிறது. எங்களுக்கென மாப்பிள்ளையூரணி கிராமத்தில் ஒதுக்கப்பட்ட இடத்தை புதிய சலவைதுறையை கட்டித்தர வேண்டும். மிகவும் பிற்பட்டோர் பட்டியலில் 41 ஜாதிகள் உள்ளன. இருப்பினும் எங்களால் அரசின் நலத்திட்ட உதவிகள் பெற இயலவில்லை. எனவே, சலவைத் தொழிலாளர்களுக்கு 20 சதவீத விழுக்காட்டில் 3 சதவீத தனி உள்ஒதுக்கீடு தர வேண்டும் என கூறியுள்ளனர்.