பொன்னேரி, நவ.22: பழவேற்காடு பகுதியில் சுமார் 45க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்கள் உள்ளன. இங்கு வார இறுதி நாட்களில் சென்னை உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து பொழுதை கழித்து செல்வார்கள். அவ்வாறு வரும் மக்கள் தாங்கள் கொண்டு வரும் உணவு பொருட்களின் மிச்சமீதியை பிளாஸ்டிக் கவரில் சுற்றி வீசிவிட்டு செல்கின்றனர். இதனால் கடற்கரை பகுதியில் பிளாஸ்டிக் கழிவுகள் அதிகரித்து வருகிறது. மேலும், பழவேற்காடு ஏரிகளிலும் கடலிலும் பிளாஸ்டிக் கழிவுகள் கொட்டப்படுவதால் மீன் வளம் பாதிக்கப்படுகிறது. இந்நிலையில், உலக மீனவர் தினத்தை முன்னிட்டு பழவேற்காடு மகிமை மாதா ஆலய நிர்வாகிகள் மற்றும் தொண்டு நிறுவனம் இணைந்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தியது. இதில், கோட்டகுப்பம் ஊராட்சிக்கு உட்பட்ட நடுக்குப்பம், நடுவூர் மாதாகுப்பம், ஆண்டிகுப்பம், அம்பேத்கர் நகர், அம்மன் நகர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் இருந்து பொதுமக்கள் முகத்துவாரம் சென்றனர்.
பின்னர் முகத்துவாரப் பகுதியில் தேங்கி இருக்கும் கழிவுகளை அகற்றுவது குறித்து பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைப்பது குறித்தும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் புனித மகிமை மாதா ஆலய பங்குத்தந்தை ஆல்வின், பொதுமக்களிடம் பிளாஸ்டிக்கின் தீமைகள் குறித்தும் உலக மீனவர் தினம் குறித்தும் விளக்கி பேசினார்.பின்னர், நூற்றுக்கும் மேற்பட்ட படகுகளில் மீனவர்கள் முகத்துவாரத்தில் இருந்து விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பேனர்கள் மற்றும் பதாகைகளை ஏந்திக்கொண்டு பேரணியாக பழவேற்காடு மேம்பாலம் வழியாக கடலில் பேரணியாக சென்றனர். . இதில் ஏராளமான மீனவர்கள் கலந்து கொண்டனர்.