காஞ்சிபுரம், நவ. 21: பாலியல் தொல்லை கொடுத்த சாமியார் மீது கொடுத்த புகார் மீது நடவடிக்கை எடுக்காமல் போலீசார் அலட்சியம் காட்டுவதாக மாதர் சங்கத்தினர் மாவட்ட எஸ்.பி.,யிடம் புகார் அளித்துள்ளனர். மாதர் சங்கம் சார்பில், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் புகார் மனு ஒன்று அளிக்கப்பட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது: செய்யூர் அடுத்த ஓதியூர் கிராமத்தில் தர் என்பவர் தன்னை சக்திவாய்ந்த சாமியார் என்று கூறிக்கொண்டு மக்களுக்கு ஆசி வழங்கி வந்துள்ளார். இதனை நம்பி, பலர் அவரிடம் ஏமாந்துள்ளனர். இந்நிலையில், ஓதியூர் கிராமத்தை சேர்ந்த இரண்டு பெண்களுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதால் அவர்களது குடும்பத்தினர் சாமியார் தரிடம் சென்றுள்ளனர்.
இவர்களுக்கு சிறப்பு பூஜை நடத்த வேண்டும் என்று கூறி சாமியார், தனி அறையில் பூஜை செய்வதாக பாலியல் தொந்தரவு செய்துள்ளார். அவரிடம் இருந்து தப்பி வந்த பெண்கள் செய்யூர் போலீசில் புகார் கொடுத்துள்ளனர்.
புகார் கொடுத்து இரு வாரங்கள் கடந்த நிலையிலும் சாமியாரை போலீசார் கைது செய்யாமல் அலட்சியமாக உள்ளனர். எனவே, பாதிக்கப்பட்டவர்கள் கொடுத்த புகாரின் பேரில் போலி சாமியார் தரை கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.