அரவக்குறிச்சி, நவ. 20: அரவக்குறிச்சியை அடுத்த நாகம் பள்ளியில் பண்ணை மகளிருக்கான மேம்படுத்தப்பட்ட விவசாயக் கருவிகள் கையாளுவது பற்றி பயிற்சி முகாம் நடைபெற்றது. இம்முகாமில் பணிச் சூழலை மேம்படுத்துதல் மூலமாக பண்ணையில் பணிபுரியும் மகளிருக்கு வேலைச் சுமையை குறைப்பதற்காக நவீன கருவிகள் கையாளுவது குறித்து பயிற்சியளிக்கப்பட்டது. நுகர்வோர் அறிவியல் துறை துணை பேராசிரியர் முனைவர் நல்லகுரும்பன், லோகேஸ்வரி மற்றும் மோகனலட்சுமணன் ஆகியோர் பயிற்சி மற்றும் செய்முறை விளக்கமளித்தனர். இம்முகாமில் இப்பகுதியைச் சேர்ந்த 80க்கும் மேற்பட்ட தோட்டக்கலை பண்ணை மகளிர் மற்றும் தமிழக அரசின் கீழ் இயங்கி வரும் மதுரை சமுதாயக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய அலுவலர்கள், அரவக்குறிச்சி தோட்டக் கலை துறையினர் கலந்து கொண்டனர்.