செம்பனார்கோவில்,நவ.8: நாகை மாவட்டம், செம்பனார்கோவில் ஊராட்சி ஒன்றிய உதவி தொடக்கப்பள்ளியில் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் 18 வயதுக்குட்பட்ட மாற்றுத்திறனாளி பள்ளி மாணவர்களுக்குசிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாமிற்கு வட்டார கல்வி அலுவலர் சீனிவாசன் தலைமை தாங்கினார். வட்டார வளமைய மேற்பார்வையாளர் சுப்பிரமணியன் வரவேற்று பேசினார். அனைவருக்கும் இடைநிலை கல்வி மாவட்ட உதவித்திட்ட அலுவலர் முத்தெழிலன் முகாமை தொடங்கி வைத்து பேசினார். தொடர்ந்து மாற்றுத்திறன் மாணவ-மாணவிகளுக்கு கண், காது, கை, கால், மூக்கு, தொண்டை உள்ளிட்டவைகளை பரிசோதனை செய்து ஆலோசனை வழங்கப்பட்டது. இதில் கலந்துகொண்ட மாணவர்களுக்கு புதிய அடையாள அட்டை, மாதாந்திர உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, இலவச பஸ் மற்றும் ரயில் அட்டை போன்ற சலுகைகளுக்கு பதிவு செய்யப்பட்டது. அனைவருக்கும் தேனீர், மதிய உணவு பயணப்படித்தொகை போன்றவை வழங்கப்பட்டது. முகாமில் செம்பனார்கோவில் மயிலாடுதுறை குத்தாலம், கொள்ளிடம் ஆகிய ஒன்றியங்களை சேர்ந்த சிறப்பு கல்வி பயிற்றுனர்கள் கலந்து கொண்டனர். முகாம் ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர்கள் ஹேமலதா, முருகன், ஆகியோர் செய்திருந்தனர்.