கூடுவாஞ்சேரி, நவ.2: வேங்கடமங்கலம் ஊராட்சியில் டெங்கு விழிப்புணர்வு முகாம் நேற்று நடைபெற்றது. இதனை செங்கல்பட்டு தாசில்தார் ஆய்வு செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை வண்டலூர் அடுத்த வேங்கடமங்கலம் ஊராட்சியில், வேங்கடமங்கலம், ரத்தினமங்கலம் ஆகிய கிராமங்கள் உள்ளன. இங்கு 10ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வாழ்ந்து வருகின்றனர். இதில், ஊராட்சிக்கு உட்பட்ட ரத்தினமங்கலம் கிராமத்தில் லட்சுமி குபேரர் திருக்கோயில், தாகூர் பொறியியல் கல்லூரி மற்றும் மருத்துவமனை உட்பட அடுக்குமாடி குடியிருப்புகள் ஏராளமாக உள்ளன. இந்நிலையில், ரத்தினமங்கலம் கிராமத்தில் டெங்கு விழிப்புணர்வு முகாம், பிளாஸ்டிக் ஒழித்தல் மற்றும் மழைநீர் சேகரித்தல் பணி ஆகியவற்றை லட்சுமி குபேரர் திருக்கோயில் அருகில் கிராம நிர்வாக அலுவலர் சீனிவாசன் நேற்று மாலை ஏற்பாடு செய்திருந்தார். இதனை செங்கல்பட்டு தாசில்தார் பாக்கியலட்சுமி, மண்டல துணை வட்டாட்சியர் பூபாலன், தலைமை நில அளவையர் நாகராஜ் ஆகியோர் டெங்கு விழிப்புணர்வு முகாம்,
பிளாஸ்டிக் ஒழித்தல் மற்றும் மழைநீர் சேகரித்தல் பணி ஆகியவற்ற ஆய்வு செய்தனர். பின்னர் பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயத்தை வழங்கி டெங்கு விழிப்புணர்வு குறித்த துண்டு பிரசுரங்களை கொடுத்தனர். இதனையடுத்து கோயில் எதிரில் உள்ள சுடுகாட்டினை ஆய்வு செய்தனர். அப்போது சுகாதாரமற்ற நிலையில் தேங்காய் ஓடுகளை குவியல் குவியலாக கொட்டி வைத்து அதில் தீ வைத்து எரித்துக்கொண்டிருந்த கடைகாரர்களை அழைத்து அதிகாரிகள் எச்சரித்தனர். மேலும் அப்பகுதியில் உள்ள சுடுகாடு மற்றும் சாலையை ஆக்கிரமித்து வைத்துள்ள நடைபாதை கடைகளை அகற்றவும், சாலையோரத்தில் தேங்கி நிற்கும் மழைநீர் மற்றும் கழிவுநீர் ஆகியவற்றை அகற்றவும் அலுவலர்களுக்கு தாசில்தார் உத்தரவிட்டார். இதனைத்தொடர்ந்து மேற்படி பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் அப்பகுதியில் நேற்று பெரும் பரபரப்பு ஏற்பட்டது.