அஞ்சுகிராமம், நவ.2: அஞ்சுகிராமம் பஸ் நிலையத்தில் மினிடெம்போ டிரைவர் படுகொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக 2 பேர் வள்ளியூர் நீதிமன்றத்தில் சரண் அடைந்தனர். மரி மாவட்டம் அஞ்சுகிராமம் அருகே மேட்டுக்குடியிருப்பை சேர்ந்தவர் பொன்பாண்டியன் நாடார். இவரது மகன் சுயம்புலிங்கம் (35). திருமணம் ஆகாதவர். மினி டெம்போவில் தண்ணீர் கேன் விநியோகம் செய்யும் பணி செய்து வந்தார். நேற்று மாலை அஞ்சுகிராமம் பேருந்து நிலையம் உள்புறம் உள்ள கடைகளுக்கு தண்ணீர் கேன் விநியோகம் செய்து கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த அஞ்சுகிராமத்தை சேர்ந்த தங்கத்துரை மகன் ஆனந்த் மினிடெம்போவை ஒதுக்கி நிறுத்துமாறு கூறினார். ஆனந்துடன் அவரது நண்பர்களும் நின்றிருந்தனர். இதில் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இது குறித்து சுயம்புலிங்கம் அஞ்சுகிராமம் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் பஸ்நிலையம் சென்று பார்த்தபோது ஆனந்த் மற்றும் நண்பர்கள் இல்லாததால் திரும்பி சென்றனர்.
அப்போது அங்கு சிவகுமார் என்பவருடன் பைக்கில் வந்த ஆனந்த், தன்னிடம் இருந்த கத்தியால் சுயம்புலிங்கத்தை குத்தினார். ரத்த வெள்ளத்தில் விழுந்த அவரை பயணிகள் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் சுயம்புலிங்கம் உயிரிழந்தார். கன்னியாகுமரி டிஎஸ்பி முத்துப்பாண்டி, இன்ஸ்பெக்டர் ஜெயச்சந்திரன் ஆகியோர் சம்பவ இடம் வந்து விசாரணை நடத்தினர். இது குறித்து அஞ்சுகிராமம் போலீசார் 3 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். இந்தநிலையில் ஆனந்த் மற்றும் சிவகுமார் இருவரும் நேற்று வள்ளியூர் நீதிமன்றத்தில் சரணடைந்தனர். மேலும் ஒருவரை போலீசார் பிடித்து விசாரித்து வருகின்றனர்.காவல் நிலையம் முற்றுகைசுயம்பு லிங்கத்தின் உறவினர்கள், நண்பர்கள் உள்பட ஆண்கள், பெண்கள் என ஏராளமானோர் நேற்று காலை அஞ்சுகிராமம் காவல் நிலையத்தில் திரண்டனர். சுயம்பு லிங்கத்தை கொன்ற கொலையாளிகளை உடனே கைது செய்யவேண்டும் என்று கோரி அவர்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.