விருத்தாசலம், நவ. 1: விருத்தாசலம், பெண்ணாடம், கம்மாபுரம், கருவேப்பிலங்குறிச்சி, மங்கலம்பேட்டை, ஆலடி உள்ளிட்ட காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு குற்றச் சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. விருத்தாசலம் ஏஎஸ்பி தீபாசத்யன் உத்தரவின்பேரில், இன்ஸ்பெக்டர் ராஜதாமரை பாண்டியன் தலைமையிலான போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். விருத்தாசலம் சப்-இன்ஸ்பெக்டர் பொட்டா தலைமையிலான போலீசார், விருத்தாசலம் தீர்த்தமண்டப தெருவில் உள்ள மணிமுக்தாற்றின் கரையோரம் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அங்கு ராமச்சந்திரன் பேட்டையை சேர்ந்த ராஜசேகர் என்கிற கோட்டான்(23), தீர்த்தமண்டபத் தெருவை சேர்ந்த சண்முகசுந்தர்(32), புதுப்பேட்டை அப்துல்கலாம் தெருவை சேர்ந்த சுரேஷ்(31) ஆகிய பிரபல ரவுடிகள் நின்றிருந்தனர். அவர்களை விருத்தாசலம் காவல் நிலையம் கொண்டு வந்து விசாரணை நடத்தியதில், குற்றச்செயல்களில் ஈடுபட சதித்திட்டம் தீட்டியது தெரியவந்தது. தொடர்ந்து அவர்கள் 3 பேரையும் கைது செய்த போலீசார் விருத்தாசலம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இவர்கள் 3 பேரும் விருத்தாசலம், கம்மாபுரம், மங்கலம்பேட்டை ஆகிய பகுதிகளில் கொலை, கொள்ளை உள்ளிட்ட பல்வேறு தொடர் குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.