காஞ்சிபுரம், அக்.26: காஞ்சிபுரம் மாவட்ட ஊரக வளர்ச்சித்துறை அலுவலகத்தில் பணி நேரம் முடிந்த பிறகும் வேலை வாங்கும் மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை சங்கம் சார்பில் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்றுமுன்தினம் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது .
காஞ்சிபுரம் மாவட்டம் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையில் இளநிலை உதவியாளராக பணிபுரிந்த ஏகனாம்பேட்டையைச் சேர்ந்த மேகநாதன் செவ்வாய்க்கிழமை இரவு 9.30 மணிக்கு அலுவலகத்தில் இருந்து புறப்பட்டுள்ளார். வீட்டிற்கு செல்லும் வழியில் சாலை விபத்தில் மரணம் அடைந்துள்ளார். தொடர்ந்து இரவு நேரங்களில் பணிச்சுமையால் காலதாமதமாக அனுப்பப்படுவதால் இந்த அகால மரணம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. மரணத்திற்கு நீதி கேட்கும் விதமாக மாவட்ட கலெக்டர் அலுவலக வாயிலில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்க மாவட்டத் தலைவர் பரணி தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில தணிக்கை குழு செயலாளர் சார்லஸ் சசிகுமார், மாவட்ட செயலாளர் குணசேகரன், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் லெனின் உள்ளிட்ட பலர் கண்டன உரையாற்றினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் அரசு ஊழியர்கள் சுமார் 200க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.