கிருஷ்ணகிரி, அக்.23: கிருஷ்ணகிரி அரசு பள்ளியில் ஒன்றிய அளவிலான அறிவியல் கண்காட்சி நடந்தது.
கிருஷ்ணகிரி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில், ஒன்றிய அளவிலான அறிவியல் கண்காட்சி, அறிவியல் பெருவிழா, கணித கருத்தரங்கம் மற்றும் ஆசிரியர்களுக்கான அறிவியல் கண்காட்சி நடந்தது. இந்த கண்காட்சியில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள், தங்கள் படைப்புகளான இயற்கை விவசாயம், உடல் நலம் மற்றும் தூய்மை, வளங்கள் மேலாண்மை, கழிவுகள் மேலாண்மை, போக்குவரத்து மற்றும் தகவல் தொடர்பு, கணித மாதிரிகள் (நீர் மேலாண்மை) உள்ளிட்ட தலைப்புகளின் கீழ் வெளிப்படுத்தினர். அதன்படி, 25 பள்ளிகளை சேர்ந்த ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் தங்களின் 75 படைப்புகளை இக்கண்காட்சியில் வைத்திருந்தனர்.
இதில் பஸ்சில் படிக்கட்டில் நின்று பயணம் செய்யும் போது, ஏற்படும் விபத்தை தடுக்கும் வகையில் உருவாக்கப்பட்டிருந்த படைப்பு மற்றும் தொடர் வண்டியில் பயணத்தில் உருவாகும் கழிவுகளை துப்புரவு செய்யும் கருவி, பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலான படைப்பு, இயற்கை வேளாண்மை செய்தல் மற்றும் உயிரி உரம் தயாரித்தல் போன்ற பல படைப்புகள் அனைவரையும் கவரும் விதத்தில் இருந்தது.
கண்காட்சியின் நடுவர்களாக கிருஷ்ணகிரி அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவன பேராசிரியர்கள் அன்புமணி, மோகன் ஆகியோர் செயல்பட்டனர். கண்காட்சி ஏற்பாடுகளை பள்ளி தலைமை ஆசிரியர் மகேந்திரன் மற்றும் மகாராஜகடை அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் திம்மராஜ் ஆகியோர் செய்திருந்தனர்.