தொட்டியம், அக்.11: தொட்டியத்தில் திரிபுரசுந்தரி உடனுறை அனலாடீஸ்வரர் கோயிலில் உலக நன்மைக்காகவும், மண்டலபூஜை நிறைவுவிழாவை முன்னிட்டும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. தொட்டியம் சிவாலயத்தில் அண்மையில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து 48 நாட்கள் பூஜை நடைபெற்றது. இதன் நிறைவு பூஜையை முன்னிட்டு அனலாடீஸ்வரர், திரிபுரசுந்தரி மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. அப்போது 108 சங்குகளில் புனிதநீர் நிரப்பி யாகவேள்வி நடைபெற்றது. மேலும் 108 பசுக்களை வைத்து கோ பூஜையும், மூலவர் மற்றும் பிரகார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகமும் செய்யப்பட்டது. திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமியை வழிபட்டனர்.
இதேபோல் தா.பேட்டை பிள்ளாதுறை கிராம விநாயகர் மற்றும் பெரியமாரியம்மன் கோயிலில் மண்டலபூஜை நிறைவுவிழா நடைபெற்றது. யாகவேள்வி, விநாயகர் மற்றும் அம்மனுக்கு புனித நீராட்டல், வேதிகார்ச்சனை, மூலமந்திர ஜெபம், கோபூஜை உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடைபெற்றது. பெரியமாரியம்மனுக்கு தங்க கவசம் அணிவிக்கப்பட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. திரளான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை வழிபட்டனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.