திருவாரூர், அக்.11: நெல்லை மாவட்டம் தாமிரபரணி புஷ்கரவிழாவானது நாளை (12ம் தேதி) துவங்கி வரும் 23ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்நிலையில் இந்த விழா குறித்து அதன் தலைவரும், வேளாக்குறிச்சி ஆதீன கர்த்தருமான சத்யஞான மகாதேவ தேசிக பரமாச்சாரியார் சுவாமிகள் திருவாரூரில் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி: நீதிமன்ற உத்தரவுக்கு பின்னால் நெல்லை மாவட்ட நிர்வாகம் அவசரகதியில் புஷ்கர விழாவிற்குரிய பணியினை மேற்கொண்டு வருகிறது. ஆனால் கடந்த 8 மாதத்துக்கு முன்பே எங்களது விழாகுழுவினர் சார்பிலும், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் சார்பிலும் இதற்கான பணிகள் முழுவீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
விழாவிற்காக தூத்துக்குடி மாவட்ட நிர்வாகமும் முழு ஒத்துழைப்பு அளித்து வருகிறது. மேலும் கர்நாடகா, ஆந்திரா, கேரளா உட்பட வடமாநிலங்களில் இந்த புஷ்கர விழாவானது அரசு விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. எனவே தமிழகத்திலும் வரும் காலங்களில் இந்த விழாவினை அரசு விழாவாக ஏற்று நடத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.