×

பள்ளிக்கரணை கைவேலி பகுதியில் 100 கோடி அரசு நிலம் மீட்பு

வேளச்சேரி: சென்னை மாநகராட்சி 179வது வார்டுக்கு உட்பட்ட வேளச்சேரி பேபிநகர், விஜிபி செல்வா நகர், புவனேஸ்வரி நகர் மற்றும் அதை சுற்றியுள்ள பல்வேறு பகுதியில் தேங்கும் மழைநீர் புவனேஸ்வரி நகர் பகுதியில் உள்ள ஆறு கல்வெட்டு பகுதியை அடைந்து, பள்ளிக்கரணை கைவேலி பகுதிக்கு செல்லும். இந்த ஆறு கல்வெட்டு பகுதியில் உள்ள சுமார் 10 ஏக்கர் அரசு நிலத்தை ஆக்கிரமித்து வீடுகள் கட்டப்பட்டுள்ளன. இதனால் மழைக்காலங்களில் வேளச்சேரி பகுதிகளில் மழைநீர் தேங்கி பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டு வந்தது.

இதையடுத்து வருவாய்த்துறை அப்பகுதியை ஆய்வு செய்தனர். அப்போது பலர் அரசு நிலத்தை ஆக்கிரமித்து, வீடு கட்டி இருப்பது தெரிய வந்தது. இந்நிலையில் நேற்று மதியம் சோழிங்கநல்லூர் தாசில்தார் நிர்மலா தலைமையில் வருவாய்த்துறை ஊழியர்கள் பொக்லைன் இயந்திரம் மூலம் உதவியுடன் 1.5 ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்டிருந்த 24 வீடுகளை இடித்து அகற்றினர். இதன் மூலம் 100 கோடி மதிப்புள்ள நிலங்கள் மீட்கப்பட்டது. இப்பகுதியில் மீதமுள்ள 9.5 ஏக்கர் அரசு நிலத்தையும் விரைவில் மீட்க நடவடிக்கை எடுத்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதனையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வேளச்சேரி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர்.

Tags : Kavali ,
× RELATED ஆந்திர மாநிலம் காவாலிக்கு வடகிழக்கே...