பண்ருட்டி, அக். 10: பண்ருட்டி நகராட்சிக்குட்பட்ட பஞ்சவர்ணம் நகர் பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு தேவையான எந்தவொரு அடிப்படை வசதிகளும் செய்து தரப்படவில்லை. 1வது தெரு முதல் 5வது தெரு வரை சாலைகள் பழுதடைந்து மழை நீர் தேங்கி நின்று கொசு உற்பத்தி ஆகிறது. காலிமனைகளில் முட்புதர்கள் வளர்ந்துள்ளன. இதன் காரணமாக விஷ ஜந்துக்கள் அதிகமாகி பொதுமக்களை அச்சுறுத்தி வருகிறது.கடந்த 1996ம் ஆண்டு போடப்பட்ட வீட்டுமனைகளில் ஒருசில பகுதிகள் மட்டும் வீடுகள் கட்டாமல் புதர் மண்டி கிடக்கிறது. இதனை நகராட்சி நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பி புதர்களை அகற்ற நடவடிக்கை எடுப்பதில்லை. சுமார் 20 ஆண்டுகளாக இப்பகுதியில் கழிவுநீர் வாய்க்கால் வசதி ஏற்படுத்தவில்லை. வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் சாலைகளில் செல்கிறது. வீதிகளின் ஓரங்களில் புதர்கள் மண்டி அதிகளவு உள்ளதால் குழந்தைகள், சிறுவர்கள் அப்பகுதியில் செல்லவே முடியவில்லை.இப்பகுதி மக்கள் பலமுறை பிரச்னைகளை தீர்த்திட கோரிக்கை மனுக்களாக நகராட்சி நிர்வாகத்திற்கு வழங்கியும் இதுவரை சரிசெய்யப்படவில்லை. இதே நிலை நீடித்தால் விஷ ஜந்துக்களால் பல்வேறு உயிரிழப்புகள் ஏற்படும். இதனை கருத்தில் கொண்டு உடனடியாக பஞ்சவர்ணம் நகர் பிரச்னைகளை தீர்த்து வைக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை
விடுத்துள்ளனர்.