வேதாரண்யம்,அக்.10: வேதாரண்யத்தில் 15 ஆண்டாக ஜல்லிகற்கள் பெயர்ந்து குண்டும், குழியுமான சாலையால் பொதுமக்கள் அவதிப்படுகிறனர். எனவே நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரி க்கை விடுத்துள்ளனர்.வேதாரண்யம் தாலுகா நாலுவேதபதியில் உலகநாதன்காட்டு பகுதியில் சுமார் 200 குடும்பங்கள் வசித்து வருகின்றன. இவர்கள் புஷ்பவனம் சாலைக்கு வருவதற்கு ஒரே ஒரு சாலை மட்டும் உள்ளது. இந்த சாலை கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு கப்பி சாலையாகவும் ½ கிலோ மீட்டர் தூரத்திற்கு அரளை சாலையாகவும் போடப்பட்டது. பின்பு மாவட்ட ஊராட்சி நிதியிலிருந்து 2012-2013ம் ஆண்டு ஓரடுக்கு ஜல்லி சாலையாக மேம் பாடு செய்யப்பட்டது.
அதன்பிறகு இன்று வரை அந்த சாலை போடப்படாமல் ஜல்லிகள் பெயர்ந்து மிகவும் மோசமான நிலையில் உள்ளது. போக்குவரத்திற்கு லாயக்கற்ற இந்த சாலை பொதுமக்கள், பள்ளி மாணவ-மாணவிகள் அன்றாடம் சென்று வர மிகுந்த சிரமப்படுகின்றனர். சுனாமியால் பாதிக்கப்பட்ட இந்த பகுதிக்கு போடப்பட்டுள்ள இந்த ஒரே சாலையை தார்சாலையாக மாற்றித்தர வேண்டும் என பலமுறை கோரிக்கை விடுத்தும் இதுவரை எந்த பயனும் இல்லை. எனவே பொதுமக்கள் நலன் கருதி உடனடியாக இந்த கப்பி சாலையை தார் சாலையாக மாற்றித்தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.