×

வேலாயுதம்பாளையம் அருகே பூட்டப்பட்ட பொதுக் கழிப்பிடம் மீண்டும் பயன்பாட்டுக்கு வருமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு


கரூர், அக். 9: கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் அருகே பூட்டப்பட்டுள்ள பொது கழிப்பிட வளாகத்தை மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என இந்த பகுதியினர் எதிர்பார்க்கின்றனர்.கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் பகுதியில் இருந்து டிஎன்பிஎல் செல்லும் சாலையில் உள்ள அண்ணா நகரில் ரூ. 7லட்சம் மதிப்பில் 2016ம் ஆண்டு இருபாலரும் பயன்படுத்தும் வகையில் பொதுக் கழிப்பறை வளாகம் கட்டப்பட்டது.ஒருசில மாதங்கள் இந்த கழிப்பறை பயன்பாட்டுக்கு இருந்த நிலையில் கடந்த சில மாதங்களாக இந்த கழிப்பறை வளாகம் பூட்டப்பட்டு கிடக்கிறது. இதனால் அண்ணா நகரை சுற்றிலும் வசிக்கும் பொதுமக்கள் கடும் சிரமப்பட்டு வருகின்றனர்.


பொதுக்கழிப்பறை பூட்டப்பட்டுள்ள நிலையில் இதன் அருகிலேயே அசுத்தம் செய்து வரும் நிலையும் தொடர்கிறது. இதனால், சுற்றுப்புற பாதிப்பும், சுகாதார சீர்கேடும் ஏற்பட்டு வருகிறது. கடும் துர்நாற்றத்தால் அவ்வழியாக செல்வோர் மூக்கை பொத்திக்கொண்டு செல்லும் நிலையில் உள்ளனர்.எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதனை பார்வையிட்டு பூட்டப்பட்ட பொதுக் கழிப்பறை வளாகத்தை மீண்டும் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என அனைத்து தரப்பினர்களும் எதிர்பார்க்கின்றனர்.

Tags : closure ,Velayuthampalayam ,
× RELATED புகழிமலை பாலசுப்பிரமணிய கோயிலில் திரளான பக்தர்கள் கிரிவலம்