அறந்தாங்கி, அக்.9: புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே கட்டுமாவடி சாலையில் புதுச்சேரியிலிருந்து மது கடத்தி வருவதாக மதுவிலக்கு நுண்ணறிவு பிரிவு போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து எஸ்எஸ்ஐ ராஜா நேற்று அதிகாலை பிள்ளைவயல் பகுதிகளில் வாகன தணிக்கையில் ஈடுபட்டார். அப்போது சென்னை பதிவு எண் கொண்ட காரை சந்தேகத்தின் பேரில் மறித்து சோதனையிட்டார். இதில் காரின் பின்பகுதியில் பெட்டி பெட்டியாக புதுச்சேரி மதுபாட்டில்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. போலீசை கண்டதும் காரை ஓட்டி வந்த கிரண் என்பவர் தப்பி ஓடி விட்டார்.
இதையடுத்து காரில் இருந்த 3 பேரை பிடித்து, 480 மதுபாட்டில்கள் கொண்ட 10 பெட்டி மது பாட்டில்கள் மற்றும் காரை பறிமுதல் செய்தார். பின்னர் அறந்தாங்கி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். விசாரணையில் அறந்தாங்கி அடுத்த கீரமங்கலத்தை சேர்ந்த கிரண்(32), கார்த்தி (28), பரவாக்கோட்டையை சேர்ந்த குமார் என்ற முத்துக்குமார் (42), எரிச்சியை சேர்ந்த ரவிச்சந்திரன்(37) என்பது தெரியவந்தது. மூவரிடம் நடத்திய விசாரணையில், தப்பியோடிய கார் டிரைவர் கிரண் என்பவரும் போலீசில் சிக்கினார். இதையடுத்து கார் மற்றும் மதுபாட்டில்களை எஸ்எஸ்ஐ ராஜா அறந்தாங்கி போலீசில் ஒப்படைத்தார். அவர்கள் ஆலங்குடி மதுவிலக்கு அமல்பிரிவு போலீசில் ஒப்படைத்தனர். ஆலங்குடி மதுவிலக்கு அமல்பிரிவு இன்ஸ்பெக்டர் நீலகண்டன் வழக்குப் பதிவு செய்து 4 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.