×

2438 கோடி ரூபாய் மோசடியில் திடீர் திருப்பம்: முக்கிய குற்றவாளியுடன் பாஜ தலைவர்களுக்கு தொடர்பு.! போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

சென்னை: ஆருத்ரா கோல்டு நிறுவன இயக்குனர் ஹரீசுக்கும், பாஜக தலைவர்கள் அமர்பிரசாத் ரெட்டி மற்றும் அண்ணாமலைக்கும் நேரடி நட்பு இருந்தது தெரியவந்துள்ளது. மேலும் கட்சிக்காக இந்த மோசடி பணத்தை செலவு செய்துள்ளார். ஆனால் தலைவர்களுக்கு பணம் கொடுத்து கட்சிப் பதவி வாங்கினாரா? பணத்தை யாருக்கெல்லாம் கொடுத்தார் என்பது குறித்து போலீசார் ஹரீசிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை அமைந்தகரையை தலைமை இடமாக கொண்டு செயல்பட்டு வந்த ஆருத்ரா கோல்டு நிறுவனம் முதலீடு செய்பவர்களுக்கு 25 முதல் 30 சதவீதம் வரை கூடுதல் வட்டி தருவதாக அறிவித்தது. இதை நம்பி, லட்சக்கணக்கானோர் இந்த நிறுவனத்தில் முதலீடு செய்தனர். ஆனால், முதலீட்டாளர்களுக்கு பணத்தை நிறுவனம் திரும்ப செலுத்தவில்லை. இதையடுத்து, பொதுமக்களிடம் முதலீடாக பெற்ற ரூ.2,438 கோடி மோசடி செய்ததாக கொடுக்கப்பட்ட புகார் மீது பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர். இந்த வழக்கின் அடிப்படையில் அந்நிறுவனத்தின சொத்துக்கள் முடக்கப்பட்ட நிலையில், மேலாண் இயக்குனர்கள் ராஜசேகர், உஷா ராஜசேகர், மைக்கேல் ராஜ் ஆகியோர் வெளிநாட்டில் தலைமறைவாகினர்.

இந்நிலையில், அந்நிறுவனத்தின் இயக்குனரும், பாரதிய ஜனதா கட்சி நிர்வாகியுமான ஹரீஷ் மற்றும் மற்றொரு இயக்குனரான மாலதி ஆகியோரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கடந்த வாரம் கைது செய்து நீதிமன்ற காவலில் அடைத்தனர். இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள நிதி நிறுவன மோசடி வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, இருவரையும் 10 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. மனு சிறப்பு நீதிமன்ற நீதிபதி கருணாநிதி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, காவல்துறை தரப்பில் அரசு சிறப்பு வழக்கறிஞர் பாபு ஆஜராகி, விசாரணை தொடர்ந்து நடந்துவருவதாலும், பலர் தலைமறைவாகியிருப்பதாலும் கைதானவர்களை காவலில் எடுத்து விசாரிக்க வேண்டியுள்ளது என்று வாதிட்டார்.

மனுவை விசாரித்த நீதிபதி ஆருத்ரா கோல்டு நிறுவனத்தின் இயக்குனர் ஹரீஷை 4 நாட்களும், மாலதியை ஒரு நாளும் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்து உத்தரவிட்டார். அதைத் தொடர்ந்து நேற்று இரவு முதல் ஹரீசிடம் பொருளாதாரக் குற்றப்பிரிவு ஏடிஜிபி வினித் தேவ் வாங்கடே, ஐஜி ஆசியம்மாள், எஸ்பி மகேஸ்வரன் ஆகியோர் கொண்ட தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர். போலீசாரிடம் ஹரீஸ் வாக்குமூலம் அளித்தது குறித்து அதிகாரிகள் கூறியதாவது: ஹரீஸ் குத்துச் சண்டை வீரராக இருந்தார். குத்துச் சண்டை சங்கத்தில் மாநில நிர்வாகியாகவும் இருந்தார். இதனால் அவருடன் முக்கியப் பிரமுகர்கள் பலருக்கும் பழக்கம் ஏற்பட்டது. அப்போதுதான் ஆருத்ரா கோல்டு நிறுவன உரிமையாளர் ராஜசேகருடன் பழக்கம் ஏற்பட்டது. பின்னர் தனக்கு செல்வாக்கு அதிகம் என்று ராஜசேகரிடம் கூறியதால், தனக்கும் குத்துச் சண்டை வீரர் மற்றும் அவர்களுடன் தொடர்பு வைத்துள்ளவரின் நட்பு தேவை என்று அவரை தனது நிறுவனத்தில் இயக்குநராக சேர்த்தார். இதனால் ஆருத்ரா நிறுவனத்திற்காக பல்வேறு தரப்பினரையும் உறுப்பினராக சேர்த்துள்ளார். இவ்வாறு 250 கோடி ரூபாய் அளவுக்கு முதலீடுகளை பெற்று, இந்த நிறுவனத்தில் சேர்த்துள்ளார்.

இந்த நிறுவனம் பெரிய ஏஜென்டுகளாக உள்ளவர்களுக்கு மட்டுமே வட்டியை வாரி வழங்கியது. குறிப்பாக அவர்களுக்கு பிஎம் டபிள்யூ கார் உள்பட பல சொகுசு கார்கள், வீடு, பல லட்சம் ரூபாய் என பரிசுகளை வழங்கியது. இதைப் பார்த்துத்தான் பலரும் இந்த நிறுவனத்தில் பணத்தை முதலீடு செய்தனர். ஒரு கட்டத்தில் இந்த நிறுவனம் மோசடி செய்கிறது என்பதை கண்டறிந்த ஹரீஸ், தனக்கு நெருக்கமானவர்கள் மூலம் ராஜசேகரை கடத்திச் சென்று பணம் கேட்டு மிரட்டினார். இதனால் ராஜசேகர் இவருக்கு ரூ.250 கோடியை கொடுத்து செட்டில் செய்ததாக கூறப்படுகிறது. அதாவது அவர் முதலீடாக பெற்ற பணத்தை அவரிடமே திருப்பிக் கொடுத்ததாகவும் கூறப்படுகிறது. இந்தப் பணத்தை முதலீடு செய்தவர்களுக்கு கொடுத்தால், நமக்கு என்ன லாபம் என்று கருதி அதை அப்படியே அமுக்க ஹரீஸ் முடிவு செய்தார். இதற்காக பாஜக விளையாட்டுப் பிரிவு மாநில நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டியிடம் அடைக்கலம் ஆனார். அடிக்கடி அவரை சந்தித்தார். அமர்பிரசாத் ரெட்டியை சந்திக்கச் செல்லும்போது தனது ஆதரவாளர்களுடன் செல்வார். வீட்டின் அருகே வந்ததும் எல்லோரையும் இறக்கி விட்டு விட்டு, அவர் மட்டும் காரில் தனியாக அமர்பிரசாத் ரெட்டியை சந்திப்பார்.

இதனால் அப்போது பணம் கொடுப்பதற்காகத்தான் தனியாக சென்றாரா என்ற சந்தேகம் போலீசாருக்கு எழுந்துள்ளது. அதன்பின்னர் கட்சியில் சேர்ந்த அன்றே அவருக்கு மாநில விளையாட்டு அணி நிர்வாகி பொறுப்பு வழங்கப்பட்டது. இதற்காக அண்ணாமலையை அமர்பிரசாத் ரெட்டியுடன் சேர்ந்து 2 முறை சந்தித்துப் பேசியுள்ளார். கட்சியில் உறுப்பினரே இல்லாதவருக்கு மாநில நிர்வாகப் பொறுப்பு வழங்கப்பட்டது, போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவர் மோசடியில் இருந்து தன்னை காத்துக் கொள்ளத்தான் பாஜகவில் சேர்ந்துள்ளார். இதனால் இந்த மோசடி பணத்தை கட்சியின் மூத்த நிர்வாகிகளுக்கு வழங்கியிருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.  இதனால்தான் போலீசார் தேடி வரும் நிலையிலும் மோடியை சந்திக்க சென்னை விமான நிலையத்துக்கு ஹரீசை  அமர்பிரசாத் ரெட்டி அழைத்து சென்று சந்திக்க வைத்தார் என்றும் தெரியவந்தள்ளது. இதனால் யாருக்கெல்லாம் பணத்தை கொடுத்தார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் பாஜக தலைவர்களுக்கு பணம் கொடுத்தது உறுதியானால் அவர்களிடமும் விசாரணை நடத்தி, நடவடிக்கை எடுக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர். இந்த விசாரணையில் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என்று போலீஸ் தரப்பில் கூறப்படுவது அரசியல் வட்டாரத்தை பரபரப்பாக்கியுள்ளது.

Tags : Baja , Sudden twist in Rs 2438 crore scam: BJP leaders in touch with main culprit! Shocking information in the police investigation
× RELATED உதவியாளர்களிடம் ரூ.4 கோடி பறிமுதல்...