சென்னை: சட்டத்தின் அடிப்படையிலேயே ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். 2019ம் ஆண்டு நிரவ் மோடி தப்பி ஓடிய விவகாரத்தில், எல்லா திருடர்களுக்கும் மோடி என்ற பெயர் இருக்கிறதது என ராகுல் காந்தி பேசியிருந்தார். மோடி என்ற பெயரை பயன்படுத்தி சர்ச்சையாக பேசியது தொடர்பான அவதூறு வழக்கில் ராகுல்காந்திக்கு 2 ஆண்டுகள் சிறைதண்டனை விதித்து குஜராத் மாநிலத்தில் உள்ள சூரத் நீதிமன்றம் நேற்று தீர்ப்பு அளித்தது. அதேநேரம் மேல்முறையீடு செய்ய உள்ளதாக ராகுல்காந்தி தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டதை அடுத்து, அதற்கு அனுமதி அளிக்கும் விதமாக 30 நாட்கள் அவகாசம் அளித்து நீதிமன்றம் பினை வழங்கியிருந்தது.
அதேநேரம் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின்படி எம்பிக்கள், எம்எல்ஏக்கள் 2 ஆண்டுகள் அல்லது அதற்கு மேல் சிறை தண்டனை பெற்றால், குற்றம் நிரூபிக்கப்பட்ட நாளில் இருந்து அவர்கள் தகுதி நீக்கம் செய்யப்படுவார்கள் என்கிற நிலை உள்ளது. ஆகையால் காங்கிரஸ் எம்.பி. பதவியில் இருந்து ராகுல்காந்தி நீக்கப்படலாம் என்று தகவல்கள் வெளியான வண்ணம் இருந்தன. இந்த நிலையில், வயநாடு தொகுதி எம்.பி. பதவியில் இருந்து ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டார். மக்களவை செயலகம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. ராகுல்காந்தியின் தகுதி நீக்கம், சிறை தண்டனை அறிவிக்கப்பட்ட நேற்று முதல் அமலுக்கு வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளது குறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியதாவது: ஒரு சாதாரண மனிதனுக்கு என்ன சட்டம் பொருந்துமோ, அது ராகுல் காந்திக்கும் பொருந்தும். சட்டம் அனைவருக்கும் பொருந்தும், அதுதான் ஜனநாயகம். ராகுல் காந்திக்கு வழங்கப்பட்டுள்ள தண்டனை என்பது ஊர்ஜிதம் செய்யப்பட்ட தண்டனையாக இருக்கும்போது, பாராளுமன்றத்தின் சபாநாயகருக்கு நடவடிக்கை எடுக்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது. எனவே சட்டத்தின் அடிப்படையிலேயே ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு கூறினார்.