மதுரை: தமிழ்நாட்டில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக சமூக வலைத்தளங்களில் வதந்தி பரப்பியதாக உத்தரப்பிரதேச பாஜ செய்தி தொடர்பாளர் பிரசாந்த் குமார் உம்ராவ் மீது, தூத்துக்குடி மத்திய போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி அவர் ஐகோர்ட் மதுரை கிளையில் மனு செய்திருந்தார். இந்த மனுவின் மீது நேற்று தீர்ப்பளித்த நீதிபதி ஜி.கே.இளந்திரையன், அவருக்கு முன்ஜாமீன் வழங்கினார். ‘‘மனுதாரர் மீது வழக்குப்பதிவு செய்துள்ள தூத்துக்குடி மத்திய காவல் நிலையத்தில், தினசரி காலை மற்றும் மாலை ஆஜராகி 15 நாட்களுக்கு கையெழுத்திட வேண்டும். இனிமேல் வதந்தி பரப்பும் வகையிலான தவறான கருத்துகளை உறுதி செய்யாமல் வெளியிட மாட்டேன் என பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும். நிபந்தனைகளை மீறும் வகையில் செயல்பட்டால் முன்ஜாமீன் தானாகவே ரத்தாகி விடும்’’ என்று நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.