வாணியம்பாடி : ஆலங்காயம் அருகே விவசாய நிலத்தில் பயங்கர சத்தத்துடன் மண் உள்வாங்கி 40 அடி ஆழத்துக்கு திடீர் பள்ளம் ஏற்பட்டதால் மக்கள் பீதியடைந்துள்ளனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.திருப்பத்தூர் மாவட்டம், ஆலங்காயம் அடுத்த கூவல்குட்டை பகுதியை சேர்ந்தவர் முருகேசன்(75), விவசாயி. இவருக்கு கூவல்குட்டை மலையடிவார பகுதியையொட்டி விவசாய நிலம் உள்ளது. இதில் அவர் மக்காச்சோளம் பயிரிட்டுள்ளார். வழக்கம்போல நேற்று காலை விவசாய நிலத்திற்கு தண்ணீர் பாய்ச்சுவதற்காக முருகேசன் சென்றார்.
அப்போது, நிலத்தில் திடீரென பள்ளம் ஏற்பட்டு இருப்பதை பார்த்த அவர், அதன் அருகே சென்றார். அப்போது நிலத்தின் உள்ளிருந்து பயங்கர சத்தத்துடன் நிலம் மேலும் உள்வாங்கியுள்ளது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் உடனடியாக இதுகுறித்து ஆலங்காயம் தீயணைப்பு மீட்பு படையினர், போலீசார் மற்றும் வருவாய் துறையினருக்கு தகவல் தெரிவித்தார்.
விவசாய நிலத்தில் ஏற்பட்டிருக்கும் இந்த பள்ளம் சுமார் 10 அடி அகலமும் 40 அடி ஆழமும் இருக்கும் என தெரிகிறது. இதற்கிடையில் நீருற்று பெருக்கெடுத்து திடீர் பள்ளத்தில் தண்ணீர் நிரம்ப தொடங்கியது.
தொடர்ந்து அவ்வப்போது பக்கவாட்டில் லேசான மண் சரிவு ஏற்படுவதால் தண்ணீரில் மண் கட்டி விழும் சத்தம் கேட்கிறது.இதற்கிடையில் தகவல் அறிந்து வந்த வருவாய்த்துறையினர் ‘மீண்டும் அந்த பகுதியில் மண் உள்வாங்கும் வாய்ப்புள்ளது. எனவே யாரும் பள்ளத்துக்கு அருகில் செல்ல வேண்டாம்’ என அறிவுறுத்தினர். ஆனால் பொதுமக்கள் திடீர் பள்ளத்தை காண அங்கு திரண்டனர். இதனால் பள்ளம் ஏற்பட்ட பகுதியில் இருந்து 100 அடி தொலைவில் கயிறு கட்டி ஆலங்காயம் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதுகுறித்து வருவாய்த்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘எப்படி விவசாய நிலத்தில் பள்ளம் ஏற்பட்டது என்பது தெரியவில்லை. அங்கு பள்ளம் மேலும் உள்வாங்க வாய்ப்புள்ளதால், யாரும் அருகில் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், கனிம வளத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் வேலூர் புவியியல் ஆராய்ச்சியாளர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் புவியியல் வல்லுநர்கள் இந்த இடத்தை நேரில் ஆய்வு செய்ய வாய்ப்புள்ளது. மக்கள் யாரும் தேவையின்றி அச்சமடைய வேண்டாம்’ என்றனர். விவசாய நிலத்தில் திடீர் பள்ளம் ஏற்பட்டுள்ளது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.