×

இந்தியா, வங்கதேசம் இடையே முதல் டீசல் பைப்லைன் மோடி-ஹசீனா திறப்பு

புதுடெல்லி: இந்தியா, வங்கதேசம் இடையே ரூ.377 கோடி செலவில் அமைக்கப்பட்ட முதல் டீசல் பைப்லைனை பிரதமர்கள் மோடி மற்றும் ஷேக் ஹசீனா தொடங்கி வைத்தனர். இந்தியாவில் இருந்து வங்கதேசத்திற்கு டீசல் கொண்டு செல்ல ரூ.377 கோடியில் பைப்லைன் அமைக்கும் திட்டம் 2018ல் தொடங்கப்பட்டது. இது இரு நாடுகளுக்கு இடையேயான முதல் எல்லை தாண்டிய எரிபொருள் பைப்லைன் திட்டமாகும். இதில், வங்கதேச பகுதியில் பைப் லைன் அமைப்பதற்கான ரூ.285 கோடி செலவையும் இந்திய அரசே ஏற்றுக் கொண்டது. இந்த பைப்லைனை பிரதமர் மோடியும், வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனாவும் வீடியோ கான்பரன்ஸ் மூலம் நேற்று தொடங்கி வைத்தனர்.

நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, ‘‘இந்த எரிபொருள் குழாய் இந்தியா, வங்கதேச உறவில் புதிய அத்தியாயத்தை தொடங்கும். இது, போக்குவரத்து செலவை குறைப்பதோடு, டீசல் கொண்டு செல்லும் வாகனங்களின் கார்பன் உமிழ்வையும் தடுக்கும்’’ என்றார். இதுவரை, இரு நாடுகள் இடையே 512 கிமீ ரயில் பாதை மூலம் வங்கதேசத்திற்கு டீசல் சப்ளை செய்யப்பட்டது. தற்போது இந்த பைப்லைன் அசாமில் உள்ள நுமாலிகரில் இருந்து வங்கதேசத்திற்கு 131.5 கிமீ தொலைவுக்கு அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஆண்டுக்கு 10 லட்சம் டன் வரையிலும் டீசல் விநியோகிக்கப்பட உள்ளது.


Tags : Modi ,Hasina ,India, Bangladesh , Modi-Hasina inaugurates first diesel pipeline between India, Bangladesh
× RELATED என்னை இந்த உலகிற்கு அனுப்பியது பரமாத்மாதான்: பிரதமர் மோடி