நாகப்பட்டினம்: நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியில் புகழ் பெற்ற புனித ஆரோக்கிய அன்னை பேராலயம் அமைந்துள்ளது. இந்த பேராலயத்தில் கடந்த மாதம் 22ம் தேதி சாம்பல் புதன் நிகழ்ச்சியுடன் தவக்காலம் தொடங்கியது. இதை முன்னிட்டு வெள்ளிக்கிழமைகள் தோறும் சிலுவைப்பாதை நிகழ்ச்சி நடைபெறும். அதன்படி நேற்று முன்தினம் இரவு 4வது வார சிலுவை பாதை ஊர்வல நிகழ்ச்சி நடந்தது. பேராலய அதிபர் இருதயராஜ் தலைமை வகித்தார். பேராலயத்தின் மேலகோவிலில் இருந்து பழைய மாதா கோவில் வரை ஏசுநாதரின் பாடுகளை பற்றிய ஜெபங்களை உச்சரித்தபடி பக்தர்கள் சிலுவையை கையில் ஏந்தி சென்றனர்.